திருப்பதி லட்டு சர்ச்சை தீவிரம்: சட்டவிரோத பணப்பரிமாற்றம் சந்தேகம்… அமலாக்கத்துறை அதிரடி வழக்குப் பதிவு...!
Tirupati Laddu controversy intensifies Illegal money transfer suspected Enforcement Directorate registers case
ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த 2024 செப்டம்பரில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த தகவல் வெளியானதும், உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் ஏற்பட்டது.மேலும், முந்தைய ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு விநியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், ‘நெய்’ என்ற பெயரில் வழங்கப்பட்ட பொருள் உண்மையில் ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் பிற கலப்பட பொருட்கள் என்பதும் கண்டறியப்பட்டது.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உட்பட மொத்தம் 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை ஆராய அமலாக்கத்துறையும் தனிப்பட்ட வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக பணம் சேர்த்தார்களா? ஹவாலா மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றதா ?என்பதையும் அமலாக்கத்துறை தீவிரமாக ஆராய்கிறது.
சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் அனைத்தையும் ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரணை, திருப்பதி லட்டு கலப்பட சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
English Summary
Tirupati Laddu controversy intensifies Illegal money transfer suspected Enforcement Directorate registers case