ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்க விடமாட்டோம்...! - சுதந்திரத்தை மீட்டெடுக்க மீண்டும் உறுதியேற்போம் என எல். முருகன் அதிரடி முழக்கம்...!
We will not let voice democracy stifled L Murugan slogan reaffirm our commitment restore freedom
அவசரநிலை என்பது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; இந்திய ஜனநாயகத்தின் மார்பில் பதிக்கப்பட்ட கரும்புள்ளி என மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் தளப்பதிவில் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தாலும் தேசபக்தர்களின் கனவுகளாலும் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயக இந்தியாவில், 1975-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசரநிலை, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கிய மிகப்பெரிய தாக்குதலாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

21 மாதங்கள் நீடித்த அந்த இருண்ட காலப்பகுதி, இந்திய அரசியல் வரலாற்றின் மிக வேதனையான அத்தியாயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் ஜனநாயக நடைமுறைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன.
நாட்டின் சுதந்திர அமைப்புகள் அனைத்தும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யப்பட்டனர். கருத்துரிமை நசுக்கப்பட்டது.
எதிர்ப்பு குரல்கள் ஒடுக்கப்பட்டன. ஜனநாயகத்தின் உயிரோட்டமே முடக்கப்பட்டதாக அந்த காலம் நினைவுகூரப்படுகிறது.இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தின் மாண்பையும் காக்க அச்சமின்றி போராடிய அனைத்து வீரர்களுக்கும் இந்நாளில் மரியாதை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயக சுதந்திரங்கள் மீது இதுபோன்ற அத்துமீறல்கள் இனி ஒருபோதும் நிகழாதபடி விழிப்புணர்வுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
We will not let voice democracy stifled L Murugan slogan reaffirm our commitment restore freedom