கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா..? போக்குவரத்துத் துறையும் பழுதாகிவிட்டதா? முதல்வரே?: நயினார் நாகேந்திரன் கேள்வி..!
Was the Klampakkam bus stand built just for show Chief Minister Nainar Nagendran questions
பொது மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தி தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு திமுக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா. முதல்வரே?
நேற்றிரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்குச் செல்லவிருந்த மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் திராவிட மாடல் அரசின் நீர்வாகக் குளறுபடிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது.

அதுகுறித்து பஸ் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால் மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி போராட்டங்களாலும் பற்றாக்குறைகளாலும் பொதுமக்களை வாட்டி வதைப்பதற்குப் பெயர் தான் 'நாடு போற்றும் நல்லாட்சியா?'
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த மக்கள் கேட்ட கேள்விகளுக்குக்கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால், பஸ்களோடு சேர்ந்து மொத்த போக்குவரத்துத் துறையும் பழுதாகிவிட்டதா?

மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு தனது தந்தையின் பெயரை சூட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில் அத்தனை அக்கறையுடனும் அவசரத்துடனும் செயலாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த பஸ் நிலையம் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யத் தவறிவிட்டார். இது வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா என்ற சந்தேகமும் மங்கள் மனதில் எழுகிறது.
இரவில் சாலையோரங்களிலும் பஸ் நிலையத்திலும் காத்திருந்த வயதான பெண்கள். குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அமைநிலையைப் பற்றியெல்லாம் திமுக அரசிற்கு எந்தக் கவலையும் இல்லை. பல நாடுகளுக்கு ஒய்யாரமாக சுற்றுலா செல்லும் முதல்வர். மக்களின் அத்தியாவசிய போக்குவரத்துத் தேவையை மறந்து விட்டார் போல..
பொது மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு மக்கள் நலனில் கவனம் செலுத்தி தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு திமுக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், இரவு நேர பஸ் வழித்தடங்கள். டிக்கெட் கண்காணிப்பு, அலுவலக நேரம் மற்றும் பலவற்றை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். என்று நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
English Summary
Was the Klampakkam bus stand built just for show Chief Minister Nainar Nagendran questions