பாஜகவின் திட்டம்.. போட்டு உடைத்த டி.ஆர் பாலு.. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை..!!
TRBalu predicts parliamentary elections will be held in 6months
தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முன்பே பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிடலாம் என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர் பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு "எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருப்பதாக நினைக்கக் கூடாது. பாஜகவினர் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடும் முன்பே தேர்தலை நடத்த திட்டமிடலாம். என்னை பொருத்தவரை ஆறு மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம். திமுகவினர் அதற்கு முன்பாகவே தயாராக இருக்க வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன் "மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் மிக கடுமையானதாக இருக்கும். தமிழ்நாடு வளர்ந்த மாநில பட்டியலில் உள்ளதாக கூறி தமிழ்நாட்டிற்கு மண்ணெண்ணெய் வழங்குவதை நிறுத்திவிட்டனர். எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பாஜக அரசு தான் என்பதை திமுகவினர் பெண்களிடம் எடுத்துக் கூற வேண்டும்" என பேசி உள்ளார்.
English Summary
TRBalu predicts parliamentary elections will be held in 6months