TNPSC தேர்வு ரத்து: இளைஞர்களின் கனவுகளை சிதைத்த நிர்வாக குழப்பம்! - அண்ணாமலை கடும் சாடல்!
TNPSC exam cancelled Administrative chaos shattered dreams youth Annamalai launches scathing attack
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப்–2 மற்றும் குரூப்–2A முதன்மைத் தேர்வுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கடுமையான நிர்வாகக் குழப்பங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில், “அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு நிர்வாக திறன் இழந்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியத் தேர்வு, மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அலட்சியத்தால் ரத்து செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாக தோல்வி,” என சாடியுள்ளார்.
பல ஆண்டுகளாக உழைத்து, கனவுகளை மனதில் கொண்டு தேர்வு மையங்களுக்கு வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் ஒரே நாளில் சிதறி போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இத்தகைய குளறுபடிகள் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்வது சந்தேகத்தை கிளப்புகிறது. லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த நிர்வாகத்தில் இளைஞர்களின் நம்பிக்கை தகர்க்கப்படுகிறது,” என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், இந்த பெரும் தவறுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தேர்வுகள் வெளிப்படையாகவும் குறைபாடில்லாமலும் நடைபெற அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
English Summary
TNPSC exam cancelled Administrative chaos shattered dreams youth Annamalai launches scathing attack