மேடையேற்றி அழகு பார்த்தேனே! சில மணி நேரத்தில் இப்படியா நடக்கனும்! சாலை விபத்தில் பலியான நிர்வாகிக்கு கண்ணீர் விடும் அழகிரி!
TNCC Leader ks alagiri mourning to demise of alavoor nagaraj
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும்போது, உணவகத்தில் உணவு அருந்திவிட்டு சாலை அருகில் நின்றுகொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளவூர் வி. நாகராஜ் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் பலியானார்.
இந்த செய்தியை கேட்டு அளவற்ற அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "ஐந்து மணி நேரம் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர் அரங்கத்தின் கீழே அமர்ந்திருந்ததை பார்த்து மேடையில் வந்து அமருங்கள் என்று கூறினேன். அதற்கு பிறகு அன்று இரவே விபத்தில் காலமான செய்தி எனது நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. இழக்கக் கூடாத ஒருவரை இழந்து விட்டோம்.
PIC : K.S. Alagiri
காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்த ஒரு செயல் வீரராக அவர் திகழ்ந்தார். திரு அளவூர் நாகராஜ் அவர்களது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
English Summary
TNCC Leader ks alagiri mourning to demise of alavoor nagaraj