டிடிவி தினகரன் இருக்கும் வரை... அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை..! - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு..!!
Thanga tamilselvan said due to TTV AIADMK has no chance of unity
தேனி மாவட்டம் குரங்கணியில் தேனி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் டிடிவி தினகரன் இருக்கும் வரை அதிமுக ஒன்றுசேர வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையின் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனால் அவருக்கு தேனி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம் குரங்கணையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்பொழுது பேசிய அவர் "டிடிவி தினகரன் இருக்கும் வரை அதிமுகவை ஒன்றிணையை விட மாட்டார்.
பாஜகவை கடுமையாக எதிர்த்த டிடிவி தினகரன் தற்பொழுது பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார். இதற்குக் காரணம் என்ன..? சுயநலம் தான்.
ஆரம்பத்தில் எனக்கு சாவே வந்தாலும் பாஜகவுடன் இணைய மாட்டேன் என சொல்லியவர் தற்பொழுது தனி விமானத்தில் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார்.
அதிமுக ஒன்று கூடினாலும் இன்று இருக்கும் நிலையில் திமுகவை வீழ்த்த முடியாது. ஏனென்றால் அண்ணன் தளபதியின் உழைப்பை தமிழக மக்கள் பாராட்டுகின்றனர், ரசிக்கின்றனர். எனவே அதிமுக ஒன்றிணைந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார்.
English Summary
Thanga tamilselvan said due to TTV AIADMK has no chance of unity