பதவியேற்ற ஒரே வாரத்தில் சர்ச்சையில் சிக்கிய தமிழிசை!
telugana governer tamilisai new issue
பொதுவாக மாநில கவர்னராக பதவி வகித்து வருபவர்கள் அந்த மாநிலத்தில் நடைபெறும் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. ஆனால், ஒரு சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும் உண்டு. அந்த வகையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் புதுவை கவர்னர் கிரண்பேடி ஆகியோர் நேரடி ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது, அதேபோல் தற்போது தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்திக்க குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் தமிழிசைக்கு ட்விட்டரில் ஒரு கருத்தை அனுப்பி இருந்தார். அதில், நீங்கள் வாரம் ஒரு முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என கூறி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள தமிழிசை உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி எனக்கும் இதுபோன்ற எண்ணம் உள்ளது என கூறியிருந்தார்.
மக்களை நேரடியாக சந்திப்பேன் என தமிழிசை கூறிய கருத்துக்கு கவர்னர் அதிகாரத்தை மீறும் செயல் என பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர். அதில் ஒருவர் பாரதிய ஜனதாவை தெலுங்கானாவில் வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா? என கேட்டுள்ளார். இனொருவர் குறிப்பிட்டுள்ள கருத்தில் நீங்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. அரசியல் அமைப்பு பதவியாக நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
உங்களுடைய பணிகள் அரசியல் சாசன சட்டப்படி குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது என் கூறி உள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைமை இதுவரை நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்த கட்சியை சேர்ந்த சில பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், அக்கட்சியின் சட்டமன்ற கொறடாவுமான வல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறியதாவது, எந்த மாநிலத்திலாவது கவர்னர் இதுபோன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா? விதிமுறைகள் அதற்கு இடம் அளித்தால் கவர்னர் அதை செய்யலாம். அப்படி செய்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை என கூறினார்.
இதற்கிடையே தமிழிசை தனது கருத்தை கவர்னருக்கான டுவிட்டர் தளம் மூலமாக வெளியிடவில்லை. இதற்கு முன் பாரதிய ஜனதா தலைவராக இருந்த போது பயன்படுத்திய டுவிட்டரில் தான் கருத்து சொல்லப்பட்டு இருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary
telugana governer tamilisai new issue