வெத்து விளம்பரம்! ஆ.ராசாவால் திமுக தலைவராக முடியுமா? தமிழிசையின் காட்டமான பதிலடி!
Tamilisai response to DMK ARasa comments on SanatanaDharma
திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தற்போது தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக இருப்பதற்கு சனாதான தர்மத்திற்கு எதிராக நாங்கள் பேசியதே காரணம் என கூறியது குறித்து புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் "சனாதனம் என்பதை அவர்கள் தவறாக புரிந்து வைத்துள்ளனர். சனாதனத்தை முற்றிலும் ஒழிக்கிறோம், சாதியை முற்றிலும் ஒதுக்கிறோம் என்று சொல்லும் ஆ.ராசாவால் ஏன் அவங்க கட்சியின் தலைவராக முடியவில்லை?
ஆ.ராசா தமிழக முதலமைச்சராகிவிடுவாரா? உதயநிதிக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை மற்றவர்களுக்கு கொடுப்பார்களா? ட்விட்டரில் கருவறைக்கு உள்ளே உன்னால் போக முடியுமா என எழுதுகிறார்கள். சில பழக்கவழக்கங்கள் மதத்தை சார்ந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேல்மருவத்தூர் கோவிலில் கருவறைக்குள் போக முடியும். மற்ற கோவில்களில் பூஜை செய்பவர்கள் மட்டுமே கருவறைக்குள் போக முடியும்.
மற்ற மதங்களிலும் மதம் சார்ந்த பழக்க வழக்கங்களை, கலாச்சாரத்தை பின்பற்றும் போது விமர்சிக்காதவர்கள் இந்து மதத்தில் இருக்கும் பழக்கவழக்கங்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்.
இவர்கள் சாதி, மதம் மட்டும் தான் சனாதனம் என்றும், சாதிய பாகுபாடு தான் சனாதனம் என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் சாதி பாகுபாடு இங்கு கிடையாது. சமதர்ம சமுதாயம் தான் சனாதனம். இவர்கள் தான் ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்கள். அவர்களுடைய இயக்கத்திலேயே ஒரு குடும்பத்தை தாண்டி எந்த ஒரு முக்கியத்துவத்தையும் பெற முடியாது.
ஆ.ராசா பதற்றத்தில் பேசுகிறார். நான் இன்னார் மகள் என்று சொல்லாமல் பொது வெளியில் இருந்து உயர் பதவிக்கு வந்தது போல அதுபோல திமுகவில் உயர் பதவிக்கு வர முடியுமா? அவர்கள் சனாதனத்தை எதிர்த்து பேசியதால் நாங்கள் உயர் பதவிக்கு வந்தோம் என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அவங்க இயக்கத்தில் ஆ.ராசா தலைவராகட்டும், முதல்வராகட்டும் அவர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் விளம்பரத்திற்காக பேசுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது" என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Tamilisai response to DMK ARasa comments on SanatanaDharma