மாநில அரசும் மத்திய அரசும் குகேஷ் அவர்களுக்கு தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்க ஊக்கம் அளிக்க வேண்டும்...! - ஜி.கே வாசன்
state and central governments should encourage Kukesh to continue participating in chess tournaments GK Vasan
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தமிழக செஸ் வீரர் குகேஷ் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,"இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

உலக சாம்பியனாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.இருப்பினும் தனது திறமையால், அறிவுக்கூர்மையால், கடின உழைப்பால் 3 வது இடம் பிடித்திருப்பதால் இந்தியர்கள் பெருமை அடைகிறார்கள்.
நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 10 சுற்று போட்டிகளின் இறுதியில் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3 வது இடம் பிடித்திருக்கிறார்.இந்தியாவின் விளையாட்டுத்துறையின் திறமையை உலக அரங்கில் பரப்புவதில் தமிழக விளையாட்டு வீரர் குகேஷ் அவர்கள் ஆற்றும் பங்கு போற்றுதலுக்குரியது.
குகேஷ் இந்திய மக்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்படும் வகையில் ஊக்கம் அளிக்கும் வகையில் விளையாடி வருவது பெரும் பயன் தரும். குகேஷின் வெற்றிக்கு துணையாக இருந்த அவரது குடும்பத்தினருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுகள்.நார்வே செஸ் தொடரில் 3 வது இடம் பெற்றிருக்கும் குகேஷ் அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகிறேன்.
குகேஷ் தொடர்ந்து உலக அளவில் செஸ் போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்று தாய் நாட்டின் புகழைப் பரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகிறேன்.மத்திய அரசும், தமிழக அரசும் குகேஷ் அவர்கள் தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்க, வெற்றி பெற ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி, பாராட்டி, துணை நிற்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
state and central governments should encourage Kukesh to continue participating in chess tournaments GK Vasan