ஸ்டாலின் வேண்டுமென்றே மத்திய அரசு மீது பழி போடுகிறார்!ரூ.5000 தேர்தல் நாடகம் மட்டுமே - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
Stalin is deliberately blaming the central government Rs 5000 is just an election drama Tamilisai Soundararajan criticism
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 இன்று 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தை முடக்கப் பார்க்கிறது என்று கூறுவது முற்றிலும் உண்மையற்றது. இது தர்மத்திற்கு எதிரான குற்றச்சாட்டு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிதி வழங்கல் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டினார். “முன்னதாக சில நலத்திட்டங்களை தேர்தல் ஆண்டில் வழங்கலாம் எனத் திமுக கூறியிருந்தது. தற்போது அதையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர். திட்டம் அறிவித்த பிறகு இரண்டு ஆண்டுகள் முழுமையாக வழங்காமல் இருந்த நிலையில், தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரே தொகையாக வழங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் வருவாய் குறித்து குறிப்பிட்ட அவர், “மதுபான விற்பனையின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டிக் கொண்டு, குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி, பின்னர் பெண்களுக்கு நிதி வழங்குவது தீர்வாகாது” என விமர்சித்தார். பீகார் மாநிலத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், அங்கு பூரண மதுவிலக்கு உள்ளதால் பெண்களுக்கு வழங்கப்படும் நிதி குடும்ப நலனுக்கே பயன்படுகிறது என்றார்.
அதே நேரத்தில், பெண்கள் சுயதொழில் முனைவோராக உருவாக மத்திய அரசு ‘முத்ரா’ போன்ற திட்டங்கள் மூலம் உதவி செய்து வருவதாகவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நேரடியாக நிதி வழங்கும் வசதி உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெண்களை சுயநிறைவு அடையச் செய்யும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவோம் என எடப்பாடி பழனிசாமி முன்பே அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அரசியல் விவாதம் தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Stalin is deliberately blaming the central government Rs 5000 is just an election drama Tamilisai Soundararajan criticism