மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லீம் கூட இல்லை - இது நாட்டிற்கே களங்கம் - ஹரிஷ் ராவத் பேட்டி!
Senior Congress Leader Harish Rawat Says About No Musims in Cabinet
பிரதமர் மோடி 3வது முறையாக நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் பிரதமர் மோடியுடன் 72 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் பாஜகவில் இருந்து 61 அமைச்சர்களும், இதர கூட்டணி கட்சிகளில் இருந்து 11 அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தற்போதைய அமைச்சரவை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, " தற்போது பதவி ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரவையில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.

நமது நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ளனர். இந்நிலையில் நாட்டை ஆளும் அதிகாரத்தில் அவர்களை விலக்கியிருப்பது சர்வதேச அளவில் நமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும். உலக நாடுகளிடையே நமது நாட்டின் மரியாதையை குறைக்கும்" என்று ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்தர்காண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஹரிஷ் ராவத், காங்கிரஸ் ஆட்சியின் 15ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். மேலும் அப்போது இவர் விவசாயத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறையின் இணை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senior Congress Leader Harish Rawat Says About No Musims in Cabinet