பெண்களுக்கு பாதுகாப்பா... ? பச்சை பொய்! - தமிழக பெண்கள் பாதுகாப்பு குறித்து ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடும் சாடல்
safe women blatant lie Annamalai launches scathing attack Stalin regarding women safety tn
இந்தியாவிலேயே தமிழகம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையை முன்வைத்து, அதற்கு முரணாக தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பாலியல் குற்ற சம்பவங்களைத் தொகுத்து, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்ததாக கூறப்படும் பல்வேறு சம்பவங்களை வரிசையாக சுட்டிக்காட்டியுள்ளார். அதில், நாட்டிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தி.மு.க.வை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்ட விவகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதும், தி.மு.க. நிர்வாகி முருகேசன் என்பவர் 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விட்டுவிடுவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக உள்ள புகாரும் இதில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல், தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியதாக 2 தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம், திருப்பரங்குன்றத்தில் பள்ளி மாணவியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படும் தி.மு.க. பிரமுகர் தொடர்பான குற்றச்சாட்டு, தூத்துக்குடி அருகே தாய் மற்றும் மகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகி குறித்த தகவல்களும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
மேலும், விருத்தாசலத்தில் 5 வயது குழந்தையை பாலியல் சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க. கவுன்சிலர், கரூரில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தி.மு.க. பொறியாளர் அணி நிர்வாகி, கோவையில் கணவரை பிரிந்த பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் தி.மு.க. நிர்வாகி தொடர்பான புகார்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதோடு, விருதுநகரில் இளம் பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவம், தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் கஞ்சா போதையில் தி.மு.க.வினர் நால்வர் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, ராணிப்பேட்டையில் பாலியல் தொல்லை அளிப்பதாக இரண்டு இளம்பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆகியவற்றையும் அண்ணாமலை தனது வீடியோவில் பட்டியலிட்டுள்ளார்.
இத்தனை பாலியல் குற்றச்சாட்டுகளில் தி.மு.க. நிர்வாகிகள் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் இருக்கும் நிலையில், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது “பச்சை பொய்யைத் தவிர வேறென்ன?” என அண்ணாமலை கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
English Summary
safe women blatant lie Annamalai launches scathing attack Stalin regarding women safety tn