'ஆட்சிப் பொறுப்பைத் துறக்கத் தயார்'...! - முதல்வர் விஜய் அரசுக்கு தங்கம் தென்னரசு விடுத்த அதிரடி அரசியல் சவால்...!
Ready give up responsibility governance Southern Golden State sharp political challenge Chief Minister Vijay government
தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.அவர் பேசியதாவது,"தமிழ்நாட்டில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவது புதிதான நடைமுறை அல்ல.
கடந்த 2001 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளிலும் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகால நிதிநிலை விவரங்களை உள்ளடக்கியதாக இருந்தது. அதேபோல் 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, அதற்கு முந்தைய 15 ஆண்டுகால நிதி செயல்பாடுகள் மற்றும் பொருளாதார தரவுகளை வெளிப்படுத்தியது.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகால நிதிநிலை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? அதற்கு முந்தைய ஆட்சிக்காலத்தின் நிதி நிலவரங்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளன? யாருடைய நிர்வாக செயல்பாடுகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது.
தற்போதைய அரசின் நிர்வாக இயலாமையையும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலையும் மறைப்பதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உண்மையான நிதிநிலை ஆய்வை விட அரசியல் நோக்கமே இதில் மேலோங்கி இருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை தற்போதைய ஆட்சி தனது முழு ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்தால், ஆட்சியின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியை எட்டக்கூடும். இதை நான் ஒரு அரசியல் விமர்சனமாக அல்ல, சவாலாகவே பதிவு செய்கிறேன்.கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க. அரசு ஆண்டுதோறும் பெற்ற சராசரி கடன் தொகையை விட குறைவாக தற்போதைய அரசு கடன் பெற்றால், நான் பொதுவாழ்வில் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.
மேலும், எதிர்காலத்தில் புதிய மக்கள் நலத் திட்டங்கள் அல்லது வளர்ச்சித் திட்டங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்பதை மறைமுகமாக உணர்த்தும் நோக்கிலேயே ஆளுநர் உரைக்கு முன்பாக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த வெள்ளை அறிக்கையை நிர்வாக பொறுப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியாகவே பார்க்க முடியும்.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையை மறைக்கவும், பொறுப்பை முந்தைய ஆட்சியின் மீது சுமத்தவும் இந்த ஆவணம் பயன்படுத்தப்படுவதாக அவர் விமர்சித்தார்.பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய மூலதன வளர்ச்சித் திட்டங்கள் தற்போது முன்னேற்றமின்றி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முந்தைய அரசு மூலதன முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறுவது பொருந்தாத வாதம் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்களுக்கு இணையான திட்டங்கள் சில மாநிலங்களில் கூட இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார்கள் என்பது குறித்து மக்களிடம் இன்னும் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களிலேயே அந்த சிக்கல் வெளிப்படையாக தெரிய வந்துவிட்டதாகவும், அரசின் நிதிநிலை குறித்த உண்மையான தகவல்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே தெளிவாக இடம்பெற்றிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.அந்த நிதிநிலை விவரங்களை அறிந்த பிறகே தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது வாக்குறுதிகளை செயல்படுத்த முடியாமல் பல்வேறு காரணங்களை முன்வைத்து விளக்கம் அளிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற சுமார் ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். ஆட்சிக் கால முடிவில் மாநிலத்தின் மொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் சூழல் உருவாகும். இதனை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அந்த நேரத்தில் அரசின் பதில் என்னவாக இருக்கும் என்பதையும் மக்கள் மதிப்பீடு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
அரசு கடன் பெறுவது தவறான செயல் அல்ல. ஆனால் பெறப்படும் கடன் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியமானது. அந்த நிதி மக்கள் நலன், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நீண்டகால வளர்ச்சிக்காக செலவிடப்படும்போது மட்டுமே அதன் பயன் சமூகத்திற்கு சென்றடையும் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
English Summary
Ready give up responsibility governance Southern Golden State sharp political challenge Chief Minister Vijay government