மீண்டும் ஒரு lockdown? ; உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும்'; பிரேமலதா கண்டனம்..!
Premalatha condemns the move and demands a rollback of the hiked petrol and diesel prices
உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கடுமையான விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மறுபுறம் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் உள்ளது. தற்போதைய சூழல் மீண்டும் ஒரு ‘லாக்டவுன்’ போன்ற அவசர நிலையை உருவாக்குமோ என்ற பயமும் மக்களிடையே எழுந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பது உறுதி என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். ‘மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மறுபக்கம் தட்டுப்பாடு என இரட்டைச் சுமைகளால் பொதுமக்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் தவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், சந்தையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் தீர்வுகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Premalatha condemns the move and demands a rollback of the hiked petrol and diesel prices