சோழர் திட்டங்களை மீட்டெடுக்க களமிறங்கும் அன்புமணி! காத்திருக்கும் அரியலூர் மாவட்டம்!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை  செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையான வளத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டிய அரியலூர் மாவட்டம், அவற்றில் கடைநிலை மாவட்டங்களில் ஒன்றாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பாசனக் கட்டமைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவை பராமரிக்கப்படாதது தான் இதற்கு காரணமாகும்.

தமிழ்நாட்டில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஏரிகளின் எண்ணிக்கை 100 மட்டும் தான். இவற்றில் கண்டராதித்தம் ஏரி, கரைவெட்டி-வெட்டக்குடி ஏரி, சுக்கிரன் ஏரி ஆகிய மூன்று ஏரிகள் அரியலூர் மாவட்டத்தில் தான் உள்ளன. இவை தவிர்த்து கி.பி. 10-ஆம் நூற்றாண்டில்  இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சோழகங்கம் எனப்படும் ஏரியும் அரியலூர் மாவட்டத்தில் தான் உள்ளது. இதன் நீளம் 16 கல், அகலம் 3 கல் அகலமும் கொண்டவை ஆகும். தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், மருதையாறும் அரியலூர் மாவட்டத்தில் தான் பாய்கின்றன.

ஆனாலும் அரியலூர் மாவட்டம் இன்னும் வறண்ட பூமியாகத் தான் உள்ளது. அங்கு மிகக்குறைந்த   அளவில் தான் பாசன வசதி பெற்ற நிலங்கள் உள்ளன. அரியலூர் மாவட்டத்தின் மொத்த வேளாண் பரப்பு 2.36 லட்சம் ஏக்கர். ஆனால், பாசன வசதி பெற்ற நிலங்களின் பரப்பு 90,710 ஏக்கர், அதாவது 38.43% மட்டும் தான். தமிழகத்தில் பாசன வசதி வசதி பெற்ற நிலங்களில் சராசரியான 57 விழுக்காட்டை விட மிகவும் குறைவு ஆகும். தமிழ்நாட்டின் சராசரி மழை அளவான 937மி.மீட்டரை விட அதிகமாக  954 மி.மீட்டர் மழை அரியலூர் மாவட்டத்தில் பெய்கிறது. ஆனாலும், அரியலூர் மாவட்டம் வறண்ட மாவட்டமாக நீடிப்பதற்கு காரணம் அம்மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் பயனற்றுப் போய் விட்டது தான்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய ஏரிகளுக்கும் ஆற்றிலிருந்தும், சிறிய ஏரிகளுக்கு பெரிய ஏரிகளில் இருந்தும் தண்ணீர் செல்வதற்கு நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், காலப்போக்கில் அவை முறையாக பராமரிக்கப் படவில்லை. வீராணம் ஏரியை விட பெரிய ஏரியான சோழகங்கம் ஏரி அதன் பரப்பளவில் பெரும்பகுதியை  ஆக்கிரமிப்பாளர்களிடம் இழந்து விட்டது.  பெரும் கொள்ளளவு கொண்ட ஏரிகள் தூர்வாரப்படவில்லை.

மிகவும் வலிமையான பாசனக் கட்டமைப்பைக் கொண்டுள்ள அரியலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே  நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல், அனைத்து ஏரிகளையும் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு தூர் வாருதல், கொள்ளிடம் மற்றும் மருதையாற்றில் தடுப்பணைகளை கட்டுதல்  உள்ளிட்ட சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதன் அரியலூர் மாவட்டம் இழந்த வளத்தையும், செழிப்பையும் விரைவாக மீண்டும் வென்றெடுக்க முடியும்.

சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும். மாவட்டத்தின் பல பகுதிகள் இயற்கை சுற்றுலா மையங்களாக மாறும். அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் வேலை இல்லை என்று கூறி வெளியூருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வளமாக வாழ முடியும். அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதை விட சிறந்த கனவுத்திட்டம் இருக்க முடியாது.

அதனால் தான் அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி சனிக்கிழமை, 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள  தீர்மானித்திருக்கிறேன். அரியலூர் மாவட்டத்தின் கீழப்பழுவூரில் தொடங்கும் எழுச்சி நடைபயணம்  கரைவெட்டி, கண்டராதித்தம், திருமானூர் வழியாக காட்டுமன்னார்கோயில் என்ற இடத்தில் நிறைவடையும். அரியலூர் மாவட்டத்தை வளப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் எனது தலைமையில் நடைபெறும் இந்த நடைபயணத்தில் அரசியலைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என அன்புமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani conduct walking campaign for implement chola water managemnt plans in ariyalur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->