ஆரம்பமே சொதப்பல்! வேலை காட்டிய வருண பகவான்! ஓபிஎஸ்-ன் பொதுக்கூட்டம் ரத்து!
OPS kanchipuram general meeting was cancelled
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான துவக்கமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டம் கலியனூர் கிராமத்தில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதிலும் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பொதுக் கூட்டத்திற்கு செல்லும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் "நீதியை நிலை நாட்டுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று எந்த நீதிமன்றமும் எங்களுக்கு தடை விதிக்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் என ஆரம்பம் முதல் கூறி வருகிறேன். நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது மரியாதை நிமித்தமானது தான் இது போன்ற சந்திப்புகள் தொடரும்" எனக் கூறியிருந்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பு பிறகு பொதுக்கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கிளம்பிய நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேறொரு நாளில் பொதுக்கூட்டம் நடைபெறும் என பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
English Summary
OPS kanchipuram general meeting was cancelled