பச்சைப்படுகொலை இது.! தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி.! கொந்தளிப்பில் சீமான்.! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்ததோடு, மெசியா, நாகராஜ், சாம்சன், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களது விசைப்படகைச் சுற்றிவளைத்துத் தாக்கி, சேதப்படுத்தி நடுக்கடலில் மூழ்கடித்துக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அதிலிருந்த மீனவர்கள் நான்கு பேரும் இறந்துபோன செய்தி கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது இனவெறிப்பிடித்த இலங்கைக்கடற்படை செய்த திட்டமிட்டப் பச்சைப்படுகொலையாகும். இந்திய நாட்டுக் குடிமக்களைப் படுகொலை செய்து கோரவெறியாட்டமிடும் சிங்களப்பேரினவாத அரசின் இப்படுபாதகச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த மூன்று நாட்களாக இலங்கைக் கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்ட நால்வரையும் மீட்டுத்தரக்கோரி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலைநிறுத்தம் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்ததே, இன்று நான்கு தமிழக மீனவர்களது உயிர்கள் அநியாயமாகப் பறிபோகக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்தியக் கடலோரக் காவற்படை எவ்விதத் தேடுதல் நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நான்கு மீனவர்களைத் தேடிச் செல்ல தமிழக மீனவர்களையும் அனுமதிக்காது கடந்த இரண்டு நாட்களாக எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, நான்கு ரோந்துக்கப்பல்களையும் நிறுத்தியது இலங்கைக்கடற்படை. இத்தகைய நிலையில் அம்மீனவர்கள் நால்வரும் மரணித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசியாவின் மிகப்பெரும் வல்லாதிக்க நாடாக வளர்ந்து வரும் இந்திய நாட்டைச் சேர்ந்த மீனவர்களை மிகச்சிறிய நாடான இலங்கையின் கடற்படைப் படுகொலை செய்து வருவது ஒட்டுமொத்த இந்தியப் பெருநாட்டிற்கே ஏற்பட்ட பெரும் அவமானம். மனித உயிர்கள் மலிவாக மதிப்பிடப்பட்டு உயிர்ச்சேதத்தைச் சர்வ சாதரணமாக ஏற்படுத்தும் இலங்கையைக் கண்டிக்காது இந்திய நாடு வாய்மூடி கள்ளமௌனம் சாதிப்பது வெட்கக்கேடானது.

தமிழர்கள் தாக்கப்படும்போதெல்லாம் இந்திய நாடும், அதன் ஆட்சியாளர்களும் மௌனத்தையே மொழியாகக் கொண்டு எம்மினச்சாவை எளிதாகக் கடந்துசெல்வார்களென்றால், அது பெரும் வன்மத்தை நெஞ்சிலே உரமேற்றி இந்திய நாட்டின் மீதானப் பற்றே மொத்தமாகப் பட்டுப்போகுமளவுக்குப் பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் மறக்க வேண்டாம். 

எம்மினச் சொந்தங்கள் பச்சைப்படுகொலை செய்யப்படும்போது இந்தியா அதனைத் தட்டிக்கேட்காது இலங்கையோடு கள்ள உறவு கொள்ளுமென்றால், அது தமிழர்களின் இன உணர்வையும், மான உணர்வையும் சீண்டிப்பார்ப்பதாகவே உள்ளது. இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அந்த இலங்கையோடு இணக்கத்தையும், நட்புறவையும் இந்தியா பேணுமென்றால், ‘தமிழகம் வேண்டுமா? இலங்கை வேண்டுமா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ எனும் பெருங்கோபமும், அறச்சீற்றமும் தமிழ் இளந்தலைமுறையினர் நெஞ்சில் பற்றியெரிவதை உணராதுவிட்டால், அது வரலாற்றுப்பெருந்தவறாகிப் போகும் என இந்நாட்டின் மேன்மைமிகு ஆட்சியாளர்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். இந்நாடு நாடாவதற்கு முன்பிருந்தே நீடித்து நிலைத்து வாழக்கூடிய இம்மண்ணின் பூர்வக்குடி மக்கள் தமிழர்கள் நாங்கள். இந்நாட்டின் விடுதலைக்காக வேறு எந்த இனத்தைவிடவும் அளவுக்கு அதிகமாக இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, நினைத்துப் பார்க்க முடியாத அளப்பெரும் ஈகங்களைச் செய்த தமிழினத்தை அலட்சியப்போக்கோடு அணுகும் இத்தகைய அணுகுமுறைகள் மாறாவிட்டால் வருங்காலம் இலங்கை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் பெரும் பாடம் புகட்டும். தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதை இந்தியாவின் இறையாண்மை மீதான தாக்குதலாகக் கருதி, இந்நாட்டின் ஆட்சியாளர்கள் கடும் எதிர்வினையாற்ற முன்வர வேண்டும்.

தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை அன்றைய மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசு தாரைவார்த்து, அதனை மாநிலத்தில் ஆண்ட திமுக அரசு வேடிக்கைப்பார்த்ததன் விளைவாக கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் உடல் நலிவுக்கு ஆட்பட்டு முடமாக்கப்பட்டுள்ளனர். பல கோடிக்கணக்கான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இனப்படுகொலை செய்திட்டப் போர்க்குற்றவாளிகளான மகிந்தா ராஜபக்சேவும், கோத்தபய ராஜபக்சேவும் அதிகாரத்துக்கு வந்தவுடன் மீண்டும் தமிழக மீனவர்கள் மீதானத் தாக்குதல்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. ஒரு பாரிய இனப்படுகொலையை நடத்தி முடித்து, இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த பிறகும், கொடும் வன்மமும், இனவெறியும் துளியும் அடங்காது இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இப்படுகொலைகளுக்கெல்லாம் பழிதீர்க்கிற நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, இனியும் இனப்படுகொலை நாடான இலங்கையை நட்பு நாடு எனக்கூறி எட்டுக்கோடி தமிழர்களை அவமதிக்கும் போக்கை மேற்கொள்ளாது, தமிழக மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி அலட்சியம் செய்யாது, கச்சத்தீவை மீட்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படையினரைக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் எனவும், இனி எப்போதும் இத்தகைய இனவெறிப்படுகொலைகள் நிகழாதிருக்க இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிக்கை விடுப்பதுடன், அவர்களுடான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மொத்தமாகத் துண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும், நான்கு மீனவர்களின் உடல்களை விரைந்து மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதுடன், அவர்களது குடும்பத்தினருக்குத் தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்." என்று சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK WARN RO SRI LANKAN NAVY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->