நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாளர் சே.பாக்கியராசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2012 ஆம் ஆண்டு திருமாவின் பொன்விழா பிறந்தநாள் விழாவில் அப்பொழுது இடிந்தகரை போராட்டத்தை எதிர்த்த புதுச்சேரி நாராயணசாமியையும் ஈழத்தை எதிர்த்த கே.எஸ். அழகிரியையும் சிறப்பு விருந்தினராக அழைத்த கோவத்தில் எழுதிய கட்டுரை. நம் எழுத்து நமது அண்ணனுக்கு எதிராக இருக்கவேண்டுமா அதற்காகவா அரசியலுக்கு வந்தோம் என்ற சீமான் அண்ணன் கற்பித்த அரசியலால் அப்பொழுது வெளியிடவில்லை. ஆனால் இப்பொழுது வெளியிட காரணம் தான் தவறே செய்யாததை போலவும் அவரை சாதி பார்த்து தான் 2009 காலகட்டத்தில் தமிழுணர்வாளர்கள் கைவிட்டுவிட்டார் என்பதுமாக இத்தனை வருடம் கழித்தும் அவர் தொடர்ந்து பொய் பேசுவதும் அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் ஏற்க முடியாது என்பதால் தான். இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கு என்னைப்போன்று உண்மையாக நேசித்தவர்களை விட்டு திருமா ஏன் தூர சென்றார் என்று புரியும்.
தமிழக அரசியலின் ‘பவர் ஸ்டார்’ திருமாவின் ‘’கருணா’தனம்’’ - ஒரு பார்வை
‘’மூன்று விசயங்களில் நாம் நம்மை அற்பணித்துகொள்ளவேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் அக்கறை, சிந்தனையில் மகத்தான புரட்சி.’’ என்றார் அண்ணல் அம்பேத்கர். இவ்வரிகள் ஒரு தனிமனிதனுக்கும் அவன்சார்ந்த சமூகத்திற்கும் உள்ள தொடர்பை முன்னிறுத்தி, அவனைச் சுற்றி நடக்கும் அரசியல் நகர்வுகளின் விளைவையும், அதனால் பெறபெற்ற அதிகாரத்தையும் பயன்படுத்தி, பலன்பெற்று, அந்தச் சமூகதிற்குத் திருப்பிக் கையளிப்பதுமே நோக்கமாகக் கொள்ளவேண்டும் என்பதாகும். அண்ணலின் இப்பொன் வரிகளை உள்வாங்கி அரசியல் வழமை பெற, பார்ப்பனிய கட்டமைப்பான இந்திய பெருந்தேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் வலிமைபெற களமாடினார் கான்சிராம்.
பெரியாரின் சமூகநீதிக்கான வெற்று வார்த்தைகளும், அவர் பேசிய நாத்திகமும் தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டு, அவரின் வழி வந்தவர்களாகப் பீற்றித்திரியும் திராவிடக்கட்சிகளின் கயமைத்தனத்தால் காயடிக்கப்பட்டு, சினிமா என்ற மாயவலையில் சிக்கித்திரிந்த சராசரி இளைஞனை போல நானும் தமிழக அரசியலுக்குத் தூர விலகியே நின்றிருந்தேன். தமிழர்/தமிழ்தேசிய அரசியலை உற்று நோக்கதேரியாத, அதற்கான வாய்ப்புகள் கிடைக்கபெராத நேரமது. 2008 கடைசியில் ஈழத்தில் இனஅழிப்பு போர் உக்கிரமாக நடந்த நேரமே தமிழக/தமிழர் அரசியல் களத்தை உற்றுநோக்க ஆரம்பித்தேன். நம் உறவுகள் அங்கே மடியும் பொழுது அதைத் தடுத்து நிறுத்தாத, அதற்குத் துணை போன இந்திய/தமிழக அரசியலை ஜீரணிக்க முடியாமல் தூக்கமின்றிக் கழிந்த காலமது. அப்பொழுது 2009’ன் ஆரம்பத்தில் திருமா சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் செய்தி படித்தேன். என்னைப் போல உள்ள சார்ந்த சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உருவான தமிழர், பெருவாரி இளைஞர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர் என்பதாலும், கூட்டணி மாறிய ஒரே காரணத்தால் தன்மானத்தோடு மங்களூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர் என்பதாலும் அளவற்ற அன்பும், மரியாதையும் என்றும் எனக்கு உண்டு, இருப்பினும் உண்ணாவிரதச் செய்தி அவர் மேல் மிகப்பெரும் மரியாதையை உருவாக்கியது. இந்திய தேசிய/திராவிடக் கட்சிகளின் மீது நம்பிக்கையற்று, வேறு எந்த அரசியலும் தெரியாத காரணத்தால், திருமாவை ஆதரிப்பதே வருங்கால அரசியல் என்று எண்ணியிருந்தேன்.
மூன்று நாட்களைக் கடக்கிறது உண்ணாவிரதம், நான் பயன்படுத்தும் சமூகத்தளங்களில் முகப்புப் படமாக அலங்கரித்தார் திருமா. அப்பொழுது விடுதலை சிறுத்தைகளோடு நெருக்கமாக இருந்த அசோக் என்ற தோழரிடம் திருமாவினது எண் வேண்டுமென்று கேட்டு வாங்கி, அந்த எண்ணுக்கு முதலில் உண்ணாவிரதத்தை வாழ்த்தியும் பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும் குறுஞ்செய்தி அனுப்பினேன். அன்று நான் தொடர்புகொள்ள நினைத்தது சரியான எண் தானா(?) அது போய்ச் சேர்ந்ததா(?) என்றெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் அவரைப் பற்றி நான் எழுதும் மிகச்சரியான இந்தக் கட்டுரை அவரிடம் போய்ச் சேர்ந்தால் மகிழ்வேன்.
நான்காவது நாளின் முடிவில் ராமதாஸ் சேர்ந்து போராடுவோம் என்று சொன்னார், கருணாநிதி தூது சொல்லிவிட்டிருக்கிறார் என்று திருமா உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். எனக்கும் அது தான் ஆசை. எங்கள் தியாகத் தீபம் திலீபனை பழி கொடுத்த கொடூர ஜனநாயக, பண்பற்ற தேசம் இது. ஆளும்வர்கத்தைப் பொருத்தவரை, உண்ணாவிரதம் என்பது ஒரு பலிகூடம். உண்ணாவிரதம் இருந்து திருமாவும் போராட்டக்களத்தில் இல்லாமல் போக எனக்கும் விருப்பமில்லை. அன்று மேடையில் கடைசியாகப் பேசிய திருமா காங்கிரசை ஒழிப்பேன் என்றும் ‘வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவேன்’ என்று சபதமிட்டார். உயிர் பலிகளும், ரத்தம் படிந்த பிணக்குவியலும் மட்டுமே தினச்செய்தியாய் இருந்த அன்றைய தமிழ் சமூகத்திற்கு அதற்குக் காரணமாயிருந்த காங்கிரசை ‘ஒழிப்பேன்’ என்று அவர் சபதமிட்டது அவரோடு நாம் சேர்ந்து களமாட சிறந்த காரணமாயிருந்தது. பெரும்பான்மை உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும் தங்களது இயலாமையை நினைத்துக் கவலைகொண்ட நேரத்தில் திருமாவின் இந்தக் காங்கிரஸ் அரசுக்கெதிரான நிலைப்பாடு ஒரு புதிய வரலாற்று நிகழ்வை இந்தத் தமிழ் சமூகத்திற்குத் தருவிக்கக் காத்திருந்தது. தமிழ் சமூகத்தின் ஆகப்பெரிய சாபமாய் இருந்துகொண்டு, இந்த இனத்தின் பின்னடைவுக்கு முதல் காரனியாய் விளங்கும் சாதி அடையாளத்தை மீறி தமிழருக்கான அரசியல் அடையாளமாய் மாறத்துவங்கினார் திருமா. அந்த ஆளுமையின் மிகப்பெரும் பலமாய் இயங்கிய சிறுத்தைகள் பலர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் அன்றைய கலைஞர் ஆட்சியில் கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தனர்.
போரின் கோரத்தாண்டவம் பன்மடங்கு பெருகி, தம் உறவுகளின் கருகிய பிணங்களின் மீதேறி பிழைக்க ஓடி ஒதுங்கிய ஈழமக்களின் அவலக்குரல் முள்ளிவாய்க்கால் கடற்கரைகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பும் அதற்கான கூட்டணியும் அறிவிக்கப்பட்டது. கலைஞரின் வஞ்சகவரிசையில், தமிழக/தமிழர் அரசியல் களத்தின் கடைசிக் கிடாயாய் திருமா வெட்டப்பட்டார். ஆம், எந்தக் காங்கிரசை ஒழிப்பேன் என்று சொன்னாரோ அதே காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்தது. வேதனையும் அதிர்ச்சியும் நிறைந்த சமயத்தில், ‘நான் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இல்லை தமிழகத்தில் திமுகக் கூட்டணியில் தான் இருக்கிறேன்’ என்ற அவரின் சந்தர்ப்பவாத சப்பைக்கட்டு அரசியல் நகர்வு தொடங்கியது. எனக்குப் பெரும்போராளியாய், சமரசமற்ற போர்வீரனாய் பிம்பம் கொண்டிருந்த திருமா சிறிது மங்கி, சாயம் வெளுக்கத் தொடங்கினார். அன்றைய காங்கிரசுக்குக் கூஜா தூக்கும் சூழலை சமாளிக்க ‘ஜெயலலிதாவை ஆதரிப்பதற்க்காகத்தான் கருணாநிதி எதிர்க்கிறார்களே ஒழிய, ஈழ பிரச்சனையில் உண்மையான அக்கறை இல்லை’ என்று காங்கிரசோடு இருந்துகொண்டு மற்றவர்களைப்பற்றி வியாக்கானம் பேசி தனது இரு எம்.பி. சீட்டை உறுதிபடுத்திக்கொண்டார். ‘ஒரு மாநில முதல்வரால் என்ன செய்ய முடியும் கருணாநிதி எப்படிப் போர் நிறுத்தம் செய்ய முடியும்’ என்றும் ‘இந்திய ஆளும் அரசே நினைத்தாலும் போரை நிறுத்தி இருந்திருக்க முடிந்திருக்காது’ போன்ற கூட்டணிப்பாச பசப்பு வார்த்தைகளை உதிர்த்துச் சோனியா காங்கிரஸ் – கருணாநிதி கூட்டணியின் அதிகாரபூர்வ பின்பாட்டுக்காரரான திருமா அருவருக்கத் தொடங்கினார்.
சதிகார சோனியாவை 'அன்னை சோனியா' ' அன்னை சோனியா' என்று சென்னை பிரச்சாரக் கூட்ட மேடையில் காங்கிரஸ் தொண்டரை விட விசுவாசமான அடியாளாய் மாறி கூவத்தொடங்கியதில் முதன்முதலாய் தமிழர்நல அரசியலில் இருந்து அந்நியப்பட்டுப்போனார் என்பதே உண்மை. மேலும் மக்கள் கொத்து கொத்தாய் செத்துக்கொண்டிருந்தபோது, கருணாநிதி உண்ணாவிரத நாடகம் போட்டு போர் நின்றுவிட்டது என்று சொன்னதும், ஆமாம்சாமி போட்டுப் பக்கவாத்தியம் இசைத்தார். இனம் அழிந்து நிற்கையில் அழித்தவர்களோடு இணைந்து தேர்தலில் வெற்றிபெற்று எந்தக் காங்கிரசை ஒழிப்பேன் என்று சொன்னாரோ, எந்தக் காங்கிரசோடு மத்தியில் கூட்டணி இல்லை என்று சொன்னாரோ அந்தக் காங்கிரஸ் தலைமைவகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மத்தியில் தன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவையும் தந்து, காங்கிரசோடு ஐக்கியமானார். தவிர்த்திருக்க வேண்டிய இலங்கை பயணத்தைக் கருணாநிதிக்காக மட்டுமே பயணம் செய்து, ராஜபக்சேவோடு விருந்துண்ணும் சூழலை பெற்று அசிங்கப்பட்டு, தமிழக அரசியலின் பவர் ஸ்டாராய் வலம்வர தொடங்கினார் திருமா. யாழ் பல்கலைகழகத்தில் நடந்த மாணவர்களின் கேள்விக்கணைகளில் கூனிக்குருகியது போதாதென்று, கொலைக்குற்றவாளி, இனத்துரோகி டக்ளசொடு ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டு, கலந்துரையாடியதை சபை நாகரிகம், ராஜதந்திரம் என்று பிதற்றி சமாளித்தார். இன்றோ, முதல்வாராக இருந்த கருணாநிதியால் என்ன செய்ய முடியும் என்று சொன்ன அதே வாயால் கருணாநிதியால் தான் ஈழம் சாத்தியம் என்று பல்லக்கு தூக்குகிறார். இனப்படுகொலையின் முக்கியப் பங்காளனும், ஈழமக்களின் கொடும் அவலத்தின் இந்திய முகமாய்ச் செயல்பட்டு, மொத்த இனப்படுகொலையின் முகவராய் இருந்து, எங்கள் காயம்பட்ட போராளிப் பிள்ளைகளின் கதைமுடிக்க, எம்.கே.நாராயணனையும், சிவசங்கர் மேனனையும் தனி விமானத்தில் அனுப்பி, தமிழினத்தின் வரலாறாம் புலிகளின் கனவான ஈழதேசத்தைச் சிதைத்ததின் நாயகனான பிரணாப் என்ற பார்ப்பனரை ஆதரித்து, ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடி இனத்தான் சங்கமாவை தோற்கடிக்கத் துணைபோனதொடு மட்டுமல்லாது, இனப்படுகொலைக்குக் கைமாராய்க் கையளிக்கப்பட்ட ஜனாதிபதி பதவிபெற்றவருக்குச் சால்வை அணிய காத்திகிடந்து, அவமானப்பட்டு, தனது கையாளாகாதனத்தை ஒப்புக்கொண்டார்.. காங்கிரசுடனான கொஞ்சி குலாவளுக்கு ‘மதவாத சக்திகள் வெல்லக்கூடாது’ என்று உலகமகா காரணம் கண்டுபிடித்து, பிரதமர் தன்னிடம் நேரடியாகப் பேசி ஆதரவு கேட்டதைப் பெருமையாகச் சொல்லி கூட்டணி அடிப்படையில் துணை பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்தார்.
ஈழ விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன், அந்நிய முதலீட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன், கூடங்குளம் விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன், மூவர் தூக்கு விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பேன் ஆனால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பேன் என்பதன் அடிப்படை கொள்கை, சந்தர்ப்பவாதம், பித்தலாட்டம்,பச்சோந்திதனம் ஆகியன மொத்தத்தில் அக்மார்க் "கருணா’தனம்" என்று தமிழர் அரசியலுக்கு எதிரான நோயிலிருந்தே வந்ததென அனைவரும் உணர்ந்தனர்.
எந்த அரசியல் அடையாளமுமின்றி, தமிழக அரசியல் வரலாற்றின் கடந்தகாலச் சம்பிரதாயப் போராட்டங்களைப் பின்னுக்குதள்ளி, வருங்காலத் தமிழ் பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும் கூடங்குள அணுஉலைகெதிரான மக்கள் இயக்கத்தையும், தனிச்சையான மக்கள் போராட்டமாய் உருவெடுத்து, இயற்கை, வாழ்வாதார அகபுறகூறுகளை உள்வாங்கி, நேர்மையும் சத்தியமுமாய்ப் போராடும் இடிந்தகரை மக்களின் போர்குணத்தையும் அப்பழுக்கற்ற தியாக உணர்வையும் கொச்சைபடுத்தி, கருணாதனத்தின் உச்சமாகச் சமீபத்தில் புதுச்சேரியில் அணு விஞ்ஞானி நாரவாய் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற எழுச்சி தமிழர் பொன்விழாவும் அதன் மேடையில் நாராயணசாமி புகழ அதைக் கேட்டுத் திருமா புழங்காகிதம் அடைந்து மகிழ அதன் பிறகு ஒரு மணிநேரம் அவர் ஆற்றிய உரையும் தான். அந்த உரையைக் கேட்பவர்கள் திருமா ஒட்டுமொத்த தமிழக அரசியலின் மக்கள் விரோத போக்கின் கடைசி எச்சம் என்பதைப் பறைசாற்றுகிறது.
திருமா பொன்விழா கொண்டாடுவதிலோ, அதற்கு வாங்கும் பொற்காசுகள் மூலம் தனியார் தொலைக்காட்சி தொடங்குவதிலோ எந்தச் சிக்கலும் எமக்கில்லை, தமிழர் நலன் குறித்த எந்த அக்கரையுமற்ற பெரு முதலாளிகள், கருணாநிதி, ஜெயலலிதா, மாறன் முதற்கொண்டு தங்கபாலு, வசந்த், விசயகாந்த எல்லாம் அவர்களுகேன்ற தொலைக்காட்சி வைத்திருக்கையில் தமிழர் திருமா ஆரம்பிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அண்ணல் அம்பேத்காரின் ஐம்பதாவது பிறந்தநாளில் அவருக்கு நகை தந்தார்கள், எனக்கும் அதைப் போல நீங்கள் தாருங்கள் என்று தன்னை அம்பேத்கார் அளவிற்கு உயர்த்தி நிருத்திக்கொள்வது, அடிப்படையில் அவரின் அன்புத்தோழி படத் துப்பாக்கி ஸ்டில்களை நினைவுபடுத்துகிறது. மேலும் தன்னைப் பாவபட்டவராய் காண்பிக்க, தன்னை நல்லவராய் நிலைநிறுத்த அடுத்தவரை பற்றிப் பொய் சொல்ல துணிவது அல்லது தன்னைத் தாழ்த்தி லாபமடைய முயற்சிப்பது, அம்பேத்கரியதிற்கெதிரானது, பார்ப்பனியத்தின் உட்கூறுகளில் ஒன்று. அதைத் தொடர்ந்து செய்யத்துணியும் திருமா, சிறிதும் குற்ற உணர்வின்றிக் கபடதாரியாய் இருப்பது வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் அலுவலகக் காவலாளியாய் இருந்து கலகம் செய்ய நினைக்கும் திருமாவின் புரட்சியும், எழுச்சியும் கருணாதனத்தின் அடிவருட பயன்படுமே ஒழிய, அவர் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்குச் சமூகத்திற்கும் எவ்வகையிலும் பயன்படாது என்பதே உண்மை.
தொடர்ந்து நாகரிகமற்ற பொய்களைக் கூசாமல் அவிழ்த்துவிடும் திருமாவின் சமீபத்திய வசனம் ‘‘2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகக் கூட்டணியை அமைத்தது நெடுமாறன் தான்’ என்பதே. ஜெயலலிதா தலைமையில் இருக்கும் ஒரு கூட்டணியை அய்யா நெடுமாறன் அமைத்தார் என்று சொல்வதில் இருக்கும் அரசியல் கலைஞரின் காலடியில் இருந்து வருவதாகவே தோன்றும். நள்ளிரவில் சூரியன் வரும் என்றால் எப்படிக் குழந்தைகள் சிரிக்குமோ அப்படி இதற்கும் சிரித்துவிட்டு போய்விடும். அய்யா நெடுமாறன் மீது அவதூறு வீச கலைஞரிடம் இருந்த ஒற்றைச் செருப்பு சுபவீயுடன் ஜோடி சேர்ந்துள்ள இன்னொரு செருப்பாகவே எண்ணதொன்றுகிறது. மேலும் இது போன்ற அவதூறுகளுக்கு அய்யா நெடுமாறன் எந்த முக்கியத்துவமும் தரமாட்டார் என்பதே, வன்னி அரசு மற்றும் கைத்தடிகள் அவர் மீது தொடர்ந்து அவதூறு பரப்ப காரணம்.
கருணாத்தன அரசியலில் ஒரு பாணி, பொய்யை மீண்டும் மீண்டும், எந்த வித கூச்சநாச்சமும் இன்றி ஆண்டாண்டு காலமாகப் பொது மேடையில் உண்மை போலவே கூறுவது தான். அதை அப்படியே பின்பற்றும் திருமாவின் இன்னொரு பொய் ‘‘2009யில் தான் தனிக் கூட்டணி அமைப்போம் என்று சொன்னதாகவும், அதை யாரும் கேட்காமல் அய்யா நெடுமாறன் பேச்சை கேட்க்கொண்டு அதிமுகக் கூட்டணிக்கு ராமதாசும் வைகோவும் சென்றுவிட்டதாகவும், அதனாலேயே தான் வேறு வழியில்லாமல் திமுகக் காங்கிரஸ் கூட்டணிக்குச் சென்றதாக’’ தொடர்ந்து மேடையில் முழங்குகிறார். 2006 தேர்தலுக்குப் பிறகு திமுகக் கூட்டணியில் தான் நீடித்தார் திருமா. கருணாநிதியோடு கொஞ்சி குலாவினார். அவருக்கு அம்பேத்கார்சுடர் பட்டம் கொடுத்தார். அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வருசையில் நின்றார். அப்படியான நிலையில் அவர் நான் திமுகக் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டேன் என்று அறிவிக்காமல் தனிக் கூட்டணி அமைப்போம் என்று சொன்னால் யார் வருவார்கள்? யார் நம்புவார்கள்? மக்களிடமும், தொழமை கட்சிகளிடமும் நம்பிக்கையைப் பெற எந்த முயற்சியும் எடுக்காமல், வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்ற ரீதியில் தனிக் கூட்டணி அமைப்போம் என்று அங்கே சொன்னேன் இங்கே சொன்னேன் என்று தன் பச்சோந்தி தனத்திற்குப் பொய்யை கொண்டு நியாயம் கற்பிக்கும் திருமா, இசுலாமிய வேடம் கட்டி பாட்டுப்பாடும் பொய்யான கூத்தாடி முகமே நியாபகம் வருகிறது.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் எத்தனையோ அமைப்புகள் திருமாவை அதிமுகக் கூட்டணிக்கு மாறவும், இல்லையேல் தனியாக நிற்கவும் என்று வற்புறுத்தி தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதங்களை, விடுதலை சிறுத்தைகளின் கொள்கைக்குன்று, எழுத்தாளர் ரவிக்குமார் சமூகத்தளத்தில் வெளியிட்டு திருமாவிற்கு யாரும் அழுத்தம் தரவேண்டாம் எங்களுகேன்றே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் இருக்கிறது அதற்காக நாங்கள் திமுகக் கூட்டணியில் நீடிப்போம் என்று சொன்னார். அவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இதை மறுக்கமாட்டார். ஆகத் திமுகக் கூட்டணியில் இருந்து கொண்டு ராமதாசையும் வைகோவையும் அழைத்தேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடித்தனம்.
சாதி ஒழிப்பு எங்கள் கட்சி கொள்கை என்று பேசிவிட்டு தேவர் சாதி கட்சி தலைவர் வாண்டையாரையும், காங்கிரசின் கைத்தடியும் சோ சுசாமியின் கொள்கையை அடிநாதமாய்க் கொண்டுள்ள கெ.எஸ்.அழகிரியையும் போன்விழாவிற்குத் தலைமையேற்க அழைத்து மேடையில் கைகோர்க்கும் இவர்கள் அடுத்தவர்களுக்கு அரசியல் வகுப்பெடுப்பது நகைப்பிற்குரியது. இந்த லட்சணத்தில் விசிக தம்பிகளிடம் அண்ணன் சீமான் சாதி ஒழிப்பு பற்றி விவாதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் வன்னியரசு எழுதிய கட்டுரை சொல்கிறது. வன்னி அரசு அவர்களே தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு அரங்கில் உங்கள் அருகில் தரையில் அமர்ந்திருந்து அன்றைய நிகழ்வை ஆழமாய் உள்வாங்கிய அண்ணன் சீமானுக்கு நீங்கள் ஏதும் கற்றுத்தரத் தேவையில்லை. தொடர்ந்து நாம் தமிழர் மேடைகளில் சாதி ஒழிப்பு அரசியலும் அதன் அவசியமும்தான் தமிழ்தேசிய அரசியலின் ஊற்றுகள் என்பதை வலியுறுத்திவரும் சீமானும் அவரது தம்பிகளும் என்றும் உங்களைபோன்ற சாதிய முகங்களுடன் கைகோற்பதில்லை. மேலும் திருமாவின் அரசியல் பித்தலாட்டதில் பங்காளிகளாகாமல் வெறும் பொய்முடிச்சுகளினாலான அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்தி தமிழர் நல தமிழ் தேசிய அரசியலுக்குப் பலம் சேர்க்க முயற்சியுங்கள்.
தனி ஈழத்தை அதன் விடுதலையும் ஆதரிப்பாதை சொல்லிக்கொண்டு, தமிழின கொலையாளி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மந்திரிகளையும், எம்பிக்களையும் வாழ்த்துரை வழங்க அழைப்பதும், கூடங்குளத்தைப் போராட்டத்தை ஆதரித்துவிட்டு அதற்க்கு நேர்எதிராய் இருக்கும் நாராயணசாமியை தலைமையாய் அழைத்து மகிழ்வதைச் சபைநாகரீகம் என்று பூசி மொளுகுவது முறையல்ல, மாறாகப் பல இழப்புகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் இந்த மனித சமூகத்தால் கட்டவிழ்க்கப்பட்டு, வேட்டையாடப்பட்ட என் போன்ற ஒவ்வொரு ஒடுக்கபட்டவரின் தலைக்கு வைக்கும் விலையே ஆகும்.
மேற்குலகின் பணபல அரசியலை பின்தொடர்ந்து, இந்தியாவும் தனது போலி ஜனநாயக பிம்பத்தை மெய்பிக்க, பெரு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆளும்வர்க்க முகவர்களுடன் கைகோர்த்து பொருளீட்டி தேர்தலை சந்திப்பதும், அதன் மூலம் இங்குள்ள இந்திய எதிர்ப்பு உணர்வையும், தேசிய இன முரண்களையும், வெளி உலகின் பார்வையில் இருந்து மறைத்து, ஆயுத பலத்தால் கட்டுக்குள் வைப்பதும் வாடிக்கையாகிறது. அதையும் மீறி எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஜனநாயக குடியரசின் இறையாண்மை என்ற எக்காலமும், எந்தவகையிலும் இந்திய கட்டமைப்பிற்குச் சம்பந்தமில்லாத பதில் தரப்படுகிறது. இந்தச் சர்வாதிகார கட்டமைப்பை தனதாக மெச்சிக்கொள்ளும் இந்தியா, பெருமுதலாளிகளுக்கும் அதன் பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஒரே இலக்காண, இங்குள்ள இயற்கை வளங்களையும், அதற்கு இடையூறாக இருக்கும் பூர்வகுடிகளையும் ஒடுக்கி சுரண்ட வழிவகைச் செய்கிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் ஆளும்வர்க்க முகவர்களின் அன்றைய இன்றைய கொள்கை என்பது பொருளாதாரப் பின்னணியிலேயே சீரமைக்கபடுகிறது. இம்முகவர்களின் வளர்ச்சி இம்மண்ணோடு ஒன்றிய இயக்கத்தின் வழியிலோ அல்லது அவர்களின் சமூகப் பலத்தின் பின்னணியிலோ உருவாக்கபடுகிறது. இந்தக் கோட்பாட்டு அரசியலின் பிரதிநிதியாய் இயங்கி,ஆளும்வர்க்க முகவர்களின் இந்திய முகமாய் மின்னுபவர் கலைஞர் கருணாநிதி.
சுயமரியாதை, சாதியொழிப்பு, பெண் விடுதலை, சமூகநீதி என்று பேசிய பெரியாரை முதலீடாக்கி, காவிரி முல்லை பெரியாறு போன்ற தமிழக உரிமையிலும், மொழிவாரி மாநில எல்லைப்பிரச்சனைகளிலும் தமிழர் வணிகம் அழிந்து திராவிட அடையாளத்தின் பலனாய் தமிழரல்லாதோரின் வியாபார ஆக்கிரமிப்பு போன்ற தமிழர் உடமையிலும், அனைத்துவகைச் சமரசங்களையும் செய்து, இங்குள்ள இயற்கை வளங்கள் மற்றும் இந்தத் தேசிய இனத்தின் தனிப்பெரும் தொழிலான வேளாண்மை நலிவடைந்து, இன்று எம்மக்கள் தினக்கூலிகளாய் நகரப் பேருந்து படிகளில் தொங்கி திரியவைத்து, இந்தத் தமிழ் சமூகத்தைப் பெரும் பின்னடைவுக்குத் தள்ளிய பெருமை கருணாநிதிக்குண்டு. இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்காண பங்கையும் கருணாநிதியிடமே பெறவேண்டியுள்ளது. கருணாநிதி என்ற ஒற்றைத் தவறுக்கு பிறந்தவர் எம்.ஜி.ஆர்., அதே கருணாநிதியின் தவறின் தொடர்ச்சியே இன்றைய ஜெயலலிதா.
தமிழ் சமூகத்தின் தலைவிதியாய், அரை நூற்றாண்டு ஆளும் அரசாங்ககளாய் கருணாநிதியும் அவரது துரோகங்களும், தவறுகளும் தொடர்கிறது. இவ்வனைத்து தொடர் துரோகங்களும், அதற்கான சூழலும் இந்திய ஆளும்வர்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நடக்கிறது. இந்திய சுதந்திரத்திற்குப் பின், வலுவாகக் கட்டியமைக்கப்பட்ட இந்திய தேசிய மாயையை எதிர்ப்பதாகச் சொன்ன திராவிட முகங்கள் இன்று அதன் அடிவருடிகளாய் மாறி, அடியாட்களாய் செயல்பட்டு, தமிழர் அரசியல்/நலனுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் பட்சத்தில், இந்திய தேசியத்திற்கும், தமிழினத்தின் மேன்மையை நீர்த்துப்போகக் காரணமான தமிழரல்லாத திருட்டுத் திராவிடக் கும்பலுக்கு மாற்றாய் தமிழ் சமூகம் சார்ந்த கருத்தியலில் தமிழர் அரசியலாய் தமிழ் தேசியம் உருவெடுத்தது. மேலும் சர்வதேசியமும், எங்களைச் சுற்றி இருக்கும் இறையாண்மையுள்ள ஜனநாயக தேசங்களும், அதன் காரிய தேசியங்களும், தமிழினத்தை இனப்படுகொலையில் பலி கொடுத்த காரணியை ஆராய முற்பட்ட பொழுதில் புது உருவம் பெற்ற தமிழ்தேசியம், இன்று தமிழக அரசியல் களத்தில் முன்நிற்கிறது என்பதை யாவரும் உணர்வர்.
தமிழ் தேசிய பார்வையையும் அதன் அரசியல் தேவையையும் தமிழினத்திற்கு எளிய மொழியில் சென்றடைய செய்து, குறிப்பாக ஒடுக்கப்பட மக்களிடம் கொண்டு சென்ற பெருமை திருமாவையே சேரும். தமிழின விடுதலை என்பது தமிழ் தேசிய அரசியலின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாக உருபெற்று, தமிழகம் சமூகநீதி நிலப்பரப்பாய் விளங்கவேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகளின் அன்றைய கொள்கையே இன்றும் பெரும்பான்மை தமிழ் உணர்வாளர்களின் எண்ணம். அன்று மேடை தோறும் திராவிட ஆட்சியாளர்களின் அயோக்கிதனத்தைத் தோலுரித்த திருமா இன்று கருணாத்தனத்தின் முழு உருவமாய்த் திகழ்ந்து, கருணாநிதியின் புகழ் பாடுவதையே முழு மூச்சாய் மேடை தோறும் முழங்குவது, அவருக்கும் அவரது தம்பிகளுக்கும் பெருமையாக இருக்கலாம், ஆனால் ஜெகத்ரட்சகன், பீட்டர் அல்போன்ஸ் போன்ற கருணாநிதி ரசிகர்களுக்குத் தங்கள் இடம் பறிபோய்விடுமோ என்ற பயத்தையே தரும். அதேபோல் இந்திய தேசியத்தின் ஈழ எதிர்ப்பையும், தமிழின துரோகத்தையும், காங்கிரசின் யோக்கியதையையும் அட்டவணை போட்டு வகுப்பெடுத்த திருமா இன்று சத்தியமூர்த்திபவனைப் பார்த்து பம்புவது மட்டுமல்லாது, அணு விஞ்ஞானி நாராயணசாமி தலைமையேற்க அழகுபார்த்து, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகதிற்கும் காவலாளி ஆனது பெரும் வேதனை. தொடர்ந்து ஆளும் மத்திய அரசை கூட்டணி சேர்த்து மக்கள் நலன் சார்ந்த அரசியலில் இருந்து விலகி, நிறுவனமய ஊழல் அரசியலை தமிழகத்திற்கு அறிமுகம் செய்த கருணாநிதி, இந்திய ஆளும்வர்க்க கட்டமைப்பை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றுகிறார். இந்தக் கருணாதனத்தை உள்வாங்கிப் பின்தொடரும் திருமா, 20 ஆம் நூற்றாண்டின் ஆகப பெரும் மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றிய காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வைத்துக்கொண்டு, ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அவ்வப்போது நினைவுபடுத்தியவாறு, காங்கிரஸ் கயவாளிகளுடன் கொஞ்சி குலாவுவதும், சபை நாகரிகம் என்று வேடம் கட்டி அவர்களுடன் கூத்தாடுவதும், இனப்படுகொலையில் முக்கியக் கூட்டாளியான இந்திய அரசு நினைத்திருந்தாலும் போரை நிறுத்தி இருக்க முடியாது என்று சிஞ்சா தட்டுவதும், இனப்படுகொலையில் இந்திய ஆளும் காங்கிரஸ் அரசிற்கு எந்தத் தொடர்பும் இல்லாதது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முனைவது மீண்டும் மீண்டும் பவர் ஸ்டாரை நினைவுபடுத்துகிறது.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட அண்ணலின் வரிகளும், அதைக் களம்கான துடித்த பெருமகனார் கான்சிராமின் கனவும், உத்திரபிரதேச பார்ப்பனர்களுடன் கள்ள கூட்டணி வைத்து உடன்பட்ட மாயாவதியால் மண்வாரி இறைக்கப்பட்டது. மேலும் வட இந்திய பார்ப்பன ஊடகங்களால் தவறான அரசியல் தலைமை என்பதாக முன்னிறுத்த ஏதுவாக அவர் தனது சுய விளம்பர பெருமைகளைப் பறைசாற்றி, தன் தலையில் மட்டுமல்லாது மொத்த தலித் அரசியல் எதிர்காலத்திலும் மண் வாரி இரைத்தார். திருமாவின் அரசியல் பிரவேசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் வலிமையை உலகுக்குச் சொன்ன காலம் போய் வெரும் சுவரோட்டி, பேனர் அரசியல் அளவிற்கிறங்கி, இன்று அண்ணலின் வரிகளில் உள்ள பொது ஒழுக்கம் என்பது மருந்திற்குமில்லாமல், ஒரு குறிப்பிட்ட கூட்டம் அல்லது குழு அல்லது பிரிவின் பொருளாதார முன்னேற்றத்திற்கான அக்கறை என்றாகி, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பது திரிந்து நிபந்தனையின் அடிப்படையில் பிழைப்பு என்றாகிபோனது.
திருமாவின் கருணாத்தனத்தின் உச்சமாய் ‘நான் தலித் என்பதால் என்னைத் தமிழ் தேசியவாதிகள் ஒதுக்குகிறார்கள்’ என்கிற ஒப்பாரியும், அவரது குருநாதர் கருணாவின் 'ஒரு திராவிடன் என்பதால்' பார்ப்பனிய சக்திகள் என்மேல் விஷம் கக்குகிறது என்ற ஒப்பாரியின் நகலே ஆகும். இறுதியாகத் தமிழக அரசியலின் பவர் ஸ்டார் திருமா அவர்களே, ‘கலகம்’ படத்தில் வேஷம் கட்டி நடித்தோ, காங்கிரஸ், கோபாலபுர அலுவலக வாசலில் காவல் காத்தோ உங்கள் பிழைப்பை ஊட்டுங்கள், கவலை இல்லை. தங்கள் இருப்பைத் தக்கவைக்கத் தமிழ் தேசிய அரசியலையும், ஈழ விடுதலை களத்தையும், என்றும் இடியாத இடிந்தகரை மக்களின் போராட்டத்தையும் கொச்சைபடுத்தி, எம்மக்களை இல்லாமல் செய்துவிடாதீர்" என்று தெரிவித்துள்ளார்.