“தேமுதிக இல்லாமல் யாருக்கும் வெற்றி இல்லை” – கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் வெயிட்டிங் -பிரேமலதா விஜயகாந்த்
No one wins without DMDK All parties are waiting to form an alliance Premalatha Vijayakanth
தமிழக அரசியலில் தேமுதிக மீண்டும் செல்வாக்கை காட்டி வருவதாகக் கூறியுள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ ரதயாத்திரையின் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
கோவையில் மட்டுமே தேமுதிக நிகழ்ச்சிக்கு காவல்துறை இடையூறு செய்ததாக குற்றம் சாட்டிய அவர், “நான் செல்லும் இடமெல்லாம் காவல்துறையும் மக்களும் ஆதரவு தருகிறார்கள். ஆனால் கோவையில் மட்டும் ஏன் வேறுபாடு?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உடனே அங்கிருந்த தொண்டர்கள் “செந்தில் பாலாஜி” என கோஷமிட்டதால் அரங்கமே பரபரப்பாகியது.
கட்சி கொடிகளை கூட அகற்றச் சொல்லியதை பிரேமலதா கடும் விமர்சனம் செய்தார். “லஞ்சம் வாங்கி ஜெயிலுக்குப் போனவர்கள் நாங்கல்ல. உங்கள் வேலைகளை தேமுதிகவிடம் வைத்து நடக்க வைக்காதீர்கள். காசு கொடுக்காமல் கூட்டம் கூட்ட முடியாது; கூட்டணி இல்லாமல் யாராலும் ஜெயிக்க முடியாது” என அவர் தாக்கினார்.
அதே நேரத்தில், தேமுதிக தற்போது அனைத்து கட்சிகளுக்கும் அவசியமான கூட்டணி சக்தியாக இருப்பதாகவும் தெரிவித்தார். “கேப்டன் மறைந்தார், கட்சி மறைந்துவிட்டது என பேசினவர்கள் இப்போது வாயை மூடி நிற்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்தக் கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை. அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளனர்” என்று உறுதியாகக் கூறினார்.
கோவை மாநகராட்சியின் தற்போதைய நிலையை குறிப்பிட்ட அவர், “ஒருகாலத்தில் சுத்தத்தின் அடையாளமாக இருந்த கோவை, இன்று அசுத்தமாகி விட்டது. 2026க்குப் பிறகு தேமுதிக கூட்டணி சுத்தம் செய்து காட்டும்” என தெரிவித்தார்.
மேலும், விரைவில் விஜயபிரபாகரன் இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்படுவார் என்றும், “அவர் ஜூனியர் கேப்டன்… கோவையின் செல்லப்பிள்ளை” என்று கூறி கூட்டத்தினரின் கைதட்டலை பெற்றார்.
பிரேமலதாவின் இந்த உரை கோவை மாவட்டத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
No one wins without DMDK All parties are waiting to form an alliance Premalatha Vijayakanth