தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு! தனி ரூட்டில் எடப்பாடி!
Nayinar Nagendran invites OPS TTV Dhinakaran to join National Democratic Alliance Edappadi on a separate route
தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணையுமாறு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் தினகரனை இணைப்பதை எடப்பாடி பழனிசாமி மறுத்து வரும் சூழலில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய இலக்கு எனத் தெரிவித்தார். அதற்காக யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்றும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் என்டிஏவில் இணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார். கூட்டணி தொடர்பாக இன்னும் 90 நாட்கள் கால அவகாசம் இருப்பதாகவும், பொங்கலுக்குப் பிறகு கூட்டணியின் நிலை குறித்து உறுதியான தகவல்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும், அதில் பாஜக தலையிட முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். இணைவார்கள் என்ற செய்திகள் வெளியாகி வந்தாலும், அது உண்மையா பொய்யா என்பதைப் பற்றி தன்னால் கருத்து சொல்ல முடியாது என்றும் அவர் விளக்கினார்.
மேலும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், எம்ஜிஆருக்குப் பிறகு தமிழகத்தில் நடிகர் ஒருவர் கட்சி நடத்துவது மிகவும் கடினமான காரியம் என விமர்சித்தார். விஜய் இதுவரை ஒரு கவுன்சிலர் பதவியைக்கூட வகிக்கவில்லை என்றும், மீடியா மூலம் மட்டும் இமேஜ் உருவாக்கப்படுகிறது என்றும் கூறினார். தவெக கட்சியிலேயே மாவட்ட செயலாளர் பதவி வழங்காததால் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகவும், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய நிலையை திமுக அரசு மக்களிடையே உருவாக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், ஜனவரி 4ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி வரவிருப்பதாகவும், புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும், மறுநாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழிபாடு நடத்தி டெல்லி திரும்புவார் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
English Summary
Nayinar Nagendran invites OPS TTV Dhinakaran to join National Democratic Alliance Edappadi on a separate route