நாகையில் பரபரப்பு: பாஜக முக்கிய நிர்வாகி வெட்டி படுகொலை.!!
NAAGAI MEMBER MURDERED
நாகை அருகே பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து, அவரின் உடலை ஏரியில் வீசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் பகுதியில் உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்பட்ட நிலையில் சடலமாக மிதப்பதாக அந்த பகுதி மக்கள், கீழையூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர், திருப்பூண்டி பகுதியை சேர்ந்த பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவரை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்து ஆற்றில் வீசப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பது நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.