திமுகவில் அதிரடி அமைப்பு மாற்றம்? குறுநில மன்னர்களுக்கு செக்! மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த ஆலோசனை!
Major organizational shake up in the DMK A check on the regional chieftains Proposal to increase the number of district secretaries to 100
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கட்சியை மீண்டும் அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகளில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தற்போது உள்ள 78 மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் ஆட்சியை இழந்த திமுக, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதோடு மட்டுமல்லாமல், கட்சியின் அமைப்பு கட்டமைப்பையும் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 36 பேர் கொண்ட சிறப்பு கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில், சில மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில் நான்கு முதல் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை இருப்பதால், அனைத்து பகுதிகளையும் திறம்பட கண்காணிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக கிராமங்கள் மற்றும் வார்டு அளவிலான கட்சிப் பணிகளில் மந்தநிலை காணப்படுவதாகவும், அடிமட்ட நிர்வாகிகளுடன் தொடர்பு குறைந்துள்ளதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பெரிய மாவட்டங்களை இரண்டாக அல்லது மூன்றாகப் பிரித்து புதிய அமைப்பு மாவட்டங்களை உருவாக்கும் திட்டம் குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு மாவட்ட செயலாளரின் பொறுப்புப் பரப்பும் குறைந்து, கட்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டால், தற்போது பதவி வாய்ப்புக்காக காத்திருக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக இளைஞர் அணியினர் மற்றும் நீண்டகாலமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு, கட்சியின் களப்பணிகளை வேகப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த அமைப்பு மாற்றம் பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட பின்னடைவை சரிசெய்து, மீண்டும் மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக இதை திமுக தலைமை கருதுகிறது.
கள ஆய்வுக் குழுவின் இறுதி அறிக்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, மாவட்ட மறுசீரமைப்பு, புதிய மாவட்டங்கள் உருவாக்கம் மற்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Major organizational shake up in the DMK A check on the regional chieftains Proposal to increase the number of district secretaries to 100