அனல் பறக்க! தூத்துக்குடி -மும்பை ரெயில் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பிய கனிமொழி... பதிலளித்த ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்....!
Kanimozhi raised questions about Thoothukudi Mumbai rail link Railway Minister Ashwini Vaishnav responded
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள், தூத்துக்குடி மற்றும் மும்பை இடையிலான ரெயில் இணைப்பு குறித்து மத்திய ரெயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்க்கு கேள்விகளை முன்வைத்தார்.

கனிமொழி:
அதில் அவர் ,"லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் (ரெயில் எண். 11043/11044)-ஐ தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரெயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே ரெயில் இணைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படை மற்றும் குறிப்பிடத்தக்கத் தேவையை மத்திய அரசு அறிந்திருக்கிறதா?; அறிந்திருந்தால், அதன் விவரங்கள் என்ன?
இந்த சேவையை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு தொடர்பான விவரங்கள் என்ன? தூத்துக்குடிக்கு ரெயில் இணைப்பை மேம்படுத்த அரசு வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள்? "என்று கனிமொழி எம்பி ரெயில்வே மந்திரியிடம் கேள்வி எழுப்பினார்.
அஸ்வினி வைஷ்ணவ்:
அவரது கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்ததாவது,"தற்போது மும்பை-தூத்துக்குடி பிரிவில் 19567/19568 தூத்துக்குடி-ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் சேவை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி பயணிகளின் வசதிக்காக இந்திய ரெயில்வே 19.7.2024 முதல் 16765/16766 மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (இரு வாரத்திற்கு ஒருமுறை) ரெயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் 16791/16792 திருநெல்வேலி-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் சேவையை 15.8.2024 முதல் தூத்துக்குடி வரை நீட்டித்துள்ளது. மேலும் புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ரெயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரெயில்வே துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறைகளாகும். இவை அனைத்தும் போக்குவரத்து நியாயமான தேவைகள், செயல்பாட்டு சாத்தியக்கூறு ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kanimozhi raised questions about Thoothukudi Mumbai rail link Railway Minister Ashwini Vaishnav responded