பச்சைக்கொடி காட்டிட்டாரா விஜய்?ஜெயலலிதா பாணியில் எடப்பாடிக்கு எதிராக ‘தனி அணி’ வியூகம்?எடப்பாடி பழனிசாமி சமாளிப்பாரா!
Has Vijay given the green signal Is a separate factionstrategy against Edappadi modeled after Jayalalithaa in the works
அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த காலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராகக் கையாண்ட ‘தனி அணி’ வியூகத்தை, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பயன்படுத்த சண்முகம் தரப்பு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரான நிலையில், அதிமுக அரசுக்கு எதிராக அவர் சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பினார்.
இதையடுத்து விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பலவீனப்படுத்தும் வகையில், தேமுதிகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை தனி அணியாக செயல்பட வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. அடுத்தடுத்து அவர்கள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்ததுடன், சட்டப்பேரவையிலும் விஜயகாந்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த அரசியல் நகர்வுகள் பின்னர் தேமுதிகவில் பெரும் உட்கட்சி நெருக்கடியை ஏற்படுத்தின.
இதேபோன்ற வியூகத்தை தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கையாள சண்முகம் தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து, சட்டப்பேரவையிலும் கட்சிக்கு வெளியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனி அணியாக செயல்பட வைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது.
இந்த யோசனை தொடர்பாக தவெக தலைமை தரப்பிடமும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதற்கு இது சரியான தருணமாக இருக்கும் என தவெக தரப்பில் கருதப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
அதிமுகவில் நிலவும் அதிருப்தியை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் அழுத்தத்தை உருவாக்க முடிந்தால், வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்க முடியும் என தவெக தரப்பில் கணக்கு போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் விரைவில் வெளிப்படையாக தெரியவரலாம் என்றும் சண்முகம் தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ‘தனி அணி’ முயற்சி உண்மையில் செயல்படுத்தப்படுமா, அதிமுகவில் இதனால் புதிய பிளவு ஏற்படுமா என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில்தான் தெரியவரும்.
English Summary
Has Vijay given the green signal Is a separate factionstrategy against Edappadi modeled after Jayalalithaa in the works