அண்ணாமலையாக இருந்தாலும் எதிர்த்து நிற்பேன் - காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி!
Gayathri Raghuram press meet for suriya audio issue
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து, கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்ட காயத்ரி ரகுராம், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக, அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், "6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்" என்று காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில், கட்சியில் பொறுப்பு இருக்கிறதோ இல்லையோ, நான் பாஜக தொண்டன். கண்டிப்பாக பாஜகவில் தொடர்வேன் என்று, காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது, "நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை இந்த கருத்தை தெரிவித்தால் அவரையும் எதிர்ப்பேன்.
உண்மையை பேசினேன், அதனால் நீக்கப்பட்டு உள்ளேன். தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன். என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுப்பது நியாயமில்லை.
என்னால் பாஜகவிற்கு களங்கம் என சொல்வது வேதனை அளிக்கிறது. ஒரு பெண்ணை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
ஒரு பெண்ணாக, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது எனது கடமை. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.
English Summary
Gayathri Raghuram press meet for suriya audio issue