தலித் இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக நிர்வாகிக்கு மீண்டும் பதவி!!
Duraimurugan reinstated DMK executive who insulted Dalit youth in Salem
சேலம் மாவட்டம் திருமலைகிரி அருகே தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்வதற்கு உயர்சாதியினர் தடை விதித்து இருந்த நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருவிழாவின் போது தடையை மீறி கோயிலுக்குள் சென்றுள்ளார்.
இது விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் கோவில் திருவிழாவும் நின்று போனது. இந்த நிலையில் சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் மத்தியில் நெஞ்சை பிடித்து தள்ளி அடிக்க பாய்ந்ததோடு அந்த பட்டியலின இளைஞரையும், அவருடைய தந்தையையும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து மிரட்டல் விடுத்தார்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பட்டியலின மக்களை குறிப்பிட்டு "இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோயிலுக்கே வர மாட்டேன் என்கிறான். கோயிலே வேண்டாம் என்கிறான். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன்"என மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவரை தற்காலிகமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்தார்.
பிறகு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கத்தை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கி அழகு பார்த்துள்ளார்.
பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக நிர்வாகிக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்பட்டிருப்பது பட்டியலின மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சமூக ஆர்வலர்களும் அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Duraimurugan reinstated DMK executive who insulted Dalit youth in Salem