திருக்கடையூர் பெருமாள் படையாட்சி மறைவு - டாக்டர் இராமதாஸ் இரங்கல்!
Dr Ramadoss Mourning To Thirukadaiyur Perumal Padaiyachi Death
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடி திருக்கடையூர் பெருமாள் படையாட்சி மறைவுக்கு, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னோடி பெருமாள் படையாட்சி முதுமை காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து துயரமும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே சங்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். திருக்கடையூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்தியவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஒருங்கிணைந்த நாகை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தவர். தினப்புரட்சி நாளிதழின் புரவலராக இருந்து அதன் வளர்ச்சிக்கு உதவியவர்.
வயதில் என்னை விட மூத்தவர் என்றாலும் என் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப் பணிகளில் என்னோடு ஒன்றாக பயணித்த பெருமாள் படையாட்சி இப்போது இல்லை என்பதை ஏற்க மனது மறுக்கிறது. அவரது மறைவு பெரும் இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காவிரி பாசன மாவட்டங்களின் பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning To Thirukadaiyur Perumal Padaiyachi Death