உங்களை முழுவதும் நம்புகிறேன் - திரைத்துறையை அன்புடன் அழைத்த அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பசுமைத் தாயகம் சார்பில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் காலநிலை மாற்றம் குறித்து 'சென்னை ஓட்டம்' என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "காலநிலை மாற்றம் குறித்தான நடவடிக்கையை தமிழகத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே, பசுமைத் தாயகம் சார்பில் இன்று ஒரு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்த கால நிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், தொழிலாளர்கள் மத்தியில், தொண்டு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

அனைவருக்கும் பொறுப்புள்ளது. அனைவரும் தங்களது கடமையை செய்ய வேண்டும். கிராம ஊராட்சி தொடங்கி அரசாங்கம் முதல், பள்ளி தொடக்கி பல்கலைக்கழகங்கள் வரை தங்களது பொறுப்பை உணர்ந்து விழிப்புணர்வுடன் கடமையை செய்ய வேண்டும்.

இந்த தலைமுறை, நம்முடைய தலைமுறை காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இயற்கையின் அடுத்த கட்ட தாக்குதலை நாம் கட்டுப்படுத்த முடியும். 

இன்னும் 8 ஆண்டுகளுக்குள் காலநிலை மாற்றம் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலகத்தை காப்பாற்ற முடியாது என்று, ஐநா சபை எச்சரிக்கை எடுத்துள்ளது. 

காலநிலை மாற்றத்திற்காக தமிழக அரசு சுத்தமாக நிதியை ஒதுக்கவில்லை. புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும், ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும், இன்னும் இருக்கின்ற நீர்நிலைகளை தூர்வார வேண்டும். இதற்கு நிச்சயம் தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முன்பு 45 நாள் பருவ மழை பெய்து கொண்டிருந்தது. தற்போது 30 நாட்களாக அது குறைந்துவிட்டது. மூன்று நாட்கள் பெய்யக்கூடிய மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டு செல்கிறது. அப்படி பெய்யக்கூடிய மழையை சேமித்து வைப்பதற்கு, கையாளுவதற்கு நம்மிடம் எந்த வசதியும் இல்லை.

வருகின்ற பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை. இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் அங்கங்கே பள்ளங்கள் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்றம் குறித்து திரைத்துறையினருக்கு நான் அன்பான வேண்டுகோள் வைத்து இருக்கிறேன். நிச்சயமாக நடிகர்கள், இயக்குனர்கள் சங்கங்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். திரைத்துறையினர் ஒரு விஷயத்தை சொன்னால், மக்களிடம் விரைவில் அது சென்றடையும். அவர்கள் அதனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani Ramadoss Call Cine industry for Climate Change


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->