மொத்தமாக மாறும் திமுக! மறுசீரமைப்பு குழு அமைத்து உத்தரவு!ஸ்டாலின் எடுத்த முடிவு! தோல்வி அடைந்த தலைகளின் பதவி காலி?
DMK set for a major overhaul Order issued to form a restructuring committee a decision taken by Stalin
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கையாக புதிய ஆலோசனைக் குழுவை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். மாவட்ட அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை பல்வேறு நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகித்து வரும் திமுக, காலத்திற்கேற்ப தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், கட்சியின் அமைப்பும் தொண்டர்களின் அர்ப்பணிப்புமே அதன் வலிமைக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகளை அறிய 19 கள ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழுவிலும் தலா இருவர் இடம்பெற்று, மொத்தம் 38 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை சேகரித்து அறிக்கைகளை சமர்ப்பித்ததாக அவர் கூறியுள்ளார்.
இதனுடன், "உடன்பிறப்பின் குரல்" என்ற இணையதளத்தின் மூலம் பொதுத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டதாகவும், சுமார் ஆறு லட்சம் கருத்துகள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொகுக்கப்பட்டு ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளின் அடிப்படையில் கட்சியின் அமைப்பில் விரிவான மறுசீரமைப்பு அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கிளைக் கழகங்கள் முதல் தலைமைக் கழகம் வரை அமைப்பு மாற்றங்கள், மாவட்ட எல்லை மறுவரையறை, சார்பு அணிகளின் செயல்பாடுகள், தேர்தல் பணிக்குழு மறுசீரமைப்பு, நிரந்தர தேர்தல் ஒருங்கிணைப்பு அமைப்பு உருவாக்கம் மற்றும் தலைமைக்கு ஆலோசனைகள் வழங்கும் 'திங்க் டேங்க்' அமைப்பது உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், தமிழரசி ரவிக்குமார், எம்.எம். அப்துல்லா, இ. பரந்தாமன், ச. முரசொலி எம்.பி., டாக்டர் எழிலன் மற்றும் எஸ்.கே.பி. கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு தனது பரிந்துரைகளை ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் கட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளது. அதன் பின்னர், கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்து, கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK set for a major overhaul Order issued to form a restructuring committee a decision taken by Stalin