கூட்டணி விவகாரத்தில் திமுக பண்றது ரொம்ப தப்பு! ராகுல் மீட்டில் புலம்பிய காங்கிரஸ் தலைகள்..டெல்லியில் நடந்தது என்ன!
DMK mistake in alliance issue Congress leaders lamented at Rahul meeting what happened in Delhi
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கணக்குகள், தொகுதி பங்கீடு, பிரச்சாரத் திட்டங்கள் என அரசியல் சூழல் சூடுபிடித்திருக்கும் நேரத்தில், திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைவதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய சில காங்கிரஸ் தலைவர்கள், திமுக தரப்பின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் பின்வருமாறு கூறப்படுகின்றன:காங்கிரஸ் தலைவர்கள் சிலர் திமுகவை விமர்சித்ததால், திமுக தரப்பு அதிருப்தியில் உள்ளது.இதன் காரணமாக, கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுவையே திமுக இன்னும் அமைக்கவில்லை.“எங்களிடம் வந்து நிற்குங்கள்” என்ற தொணியில் காங்கிரஸை அலைய விடுகிறது.
தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், பிரச்சாரத்திற்கு மிகக் குறைந்த நேரம்தான் கிடைக்கும்.கடைசி நேரம் வரை இழுத்து, வேறு வழியில்லாமல் குறைந்த தொகுதிகளை ஏற்க காங்கிரஸைத் திமுக கட்டாயப்படுத்தலாம்.
இந்த அணுகுமுறை “ஆபத்தான அரசியல் டெக்னிக்” என சிலர் கூட்டத்தில் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி ஆலோசனைக்குப் பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசியது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறுகையில்,“பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததால் பிரச்சனைகள் ஏற்பட்டன. தமிழ்நாட்டில் அதுபோல் நடக்கக் கூடாது. நாங்கள் பிரச்சாரத்திற்கு தயாராக இருக்கிறோம். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வர ரெடி. ஆனால் திமுக ரெடியா? சரியான நேரத்தில் கூட்டணி அமைக்க வேண்டும்”என்று வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் தொண்டர்கள் மத்தியில் வருத்தமும் கோபமும் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக தேர்தல் பொறுப்பாளரான கிரிஷ் ஜோடங்கர்வும், திமுக உடனடியாக பேச்சுவார்த்தை குழுவை அமைத்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.“தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். வேகமாக முடிவெடுக்க வேண்டும்” என்பது அவரது கருத்தாகும்.
டெல்லி ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸின் பேச்சு முறை மாறியுள்ளது என்பது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுவரை திமுகவை நேரடியாக தாக்காமல் இருந்த காங்கிரஸ், தற்போது விரக்தியுடன் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளது.
செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியுடன் நடந்த ஆலோசனையின் விவரங்களை விரைவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் பகிர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறவு எந்த திசையில் நகரும்?திமுக உடனடியாக பேச்சுவார்த்தை குழுவை அமைக்குமா?அல்லது இந்த இழுபறி புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்குமா?இந்தக் கேள்விகளுக்கான பதில் அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
DMK mistake in alliance issue Congress leaders lamented at Rahul meeting what happened in Delhi