மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.. விஜயகாந்த்.!!
dmdk vijayakanth wish for pongal
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர் பெரு மக்களுக்கும், தமிழர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உழவர் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. நெற்றி வியர்வை நிலத்தில் விழ, பாடுபட்டு பலனை அனுபவிக்கும் நாள் பொங்கல் திருநாள்.
எனவே விவசாயிகள் முன்னேற்றம் அடைய, அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது விவசாயத்தை காப்பாற்றவும் ‘ஏழைகளே இல்லாத நாடு எங்கள் தமிழ்நாடு’ என்ற லட்சியத்தை அடையவும், ஏழை மக்களின் வறுமை நீங்கிட இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்.
இந்த பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது இயற்கையின் நியதி. கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும். இந்த பொங்கல் திருநாளை பெற்றோர்களுடனும், குழந்தைகளுடனும் உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து உறவாடி மகிழ்ந்து கொண்டாட வேண்டும்.
மக்கள் மனதில் இன்பம் பொங்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
dmdk vijayakanth wish for pongal