முதல்வர் விஜயிடம் குதிரை பேரம் தொடர்பாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விரைவில் விளக்கம் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் விஜய் அளிக்கும் பதிலைப் பொறுத்தே ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக குதிரை பேரம், எம்எல்ஏக்களை ஆசை காட்டி கட்சிக்குள் இழுப்பது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் அழுத்தம் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை பல்வேறு ஆசை வார்த்தைகள், நிதி பரிமாற்றங்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் தவெக அரசு தங்கள் கட்சிக்குள் இழுத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் மௌனம் காக்கக் கூடாது என்றும் அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவின் கீழ் தமிழக அரசிடம் உடனடியாக விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேபோல் திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழுவும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து தங்களது புகார்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் புகார்களைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ்.ஜெயகுமார், பி.சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதுமட்டுமின்றி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தவெகவை நோக்கி நகர்ந்து வருவது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது இயல்பான கட்சித் தாவல் அல்ல என்றும், ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என்றும் அதிமுக மற்றும் திமுக தரப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக ஆளுநரிடம் புகார் அளித்து வரும் சூழலில், டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டுவிட்டு சென்னை திரும்பியுள்ள ஆளுநர் அர்லேகர், விஜய் அரசிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியமான அதிகாரங்களில் ஒன்றான 167-வது பிரிவை ஆளுநர் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களை சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
எதிர்க்கட்சிகள் அளித்துள்ள தொடர் புகார்களின் மீது என்ன மாதிரியான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்தே இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
டெல்லியிலிருந்து ஆளுநர் திரும்பிய பிறகு, ராஜ் பவன் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167-வது பிரிவின்படி, மாநில அரசின் நிர்வாகம் மற்றும் அமைச்சரவை முடிவுகள் தொடர்பான தகவல்களை முதலமைச்சரிடம் கேட்டுப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் முறைப்படி கடிதம் அனுப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தது எப்படி, அவர்கள் தவெகவில் இணைந்ததன் பின்னணி என்ன, அவர்களுக்கு ஏதேனும் பதவிகள் அல்லது அரசியல் சலுகைகள் உறுதியளிக்கப்பட்டதா, ஆளுங்கட்சியின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதா என்பது போன்ற விவகாரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆளுநர் விளக்கம் கேட்பது மட்டுமே உடனடியாக அரசுக்கு எதிரான நடவடிக்கையாக மாறிவிடாது. முதல்வர் தரப்பில் அளிக்கப்படும் பதில், எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் சட்டரீதியான சாத்தியக்கூறுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்.
அதேநேரத்தில், டெல்லி பயணத்திற்குப் பிறகு ஆளுநர் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் வெறும் அரசியல் புகார்களாகவே முடிவடையுமா அல்லது ஆளுநர் மாளிகை மற்றும் தமிழக அரசு இடையே புதிய அதிகார மோதலுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் அளிக்கும் விளக்கம் என்னவாக இருக்கும், அதை ஆளுநர் ஏற்றுக்கொள்வாரா அல்லது மேலும் தகவல்களை கேட்பாரா என்பதுதான் அடுத்தகட்ட தமிழக அரசியலின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
டெல்லியின் ஆதரவுடன் ஆளுநர் அர்லேகர் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பு உண்மையாகுமா அல்லது இந்த புகார்களை அரசியல் ரீதியாகவே விஜய் அரசு எதிர்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
Decision to question Vijay about horse trading Has the Governor invoked Power 167 Spells the end for Vijay administration