ஜனவரி 5-க்குள் அரசாணை வெளியிட வேண்டும்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
chennai hc order tn govt
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரமான சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் ஊர்வலங்கள் மற்றும் 'ரோடு ஷோ'க்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தமிழக அரசுக்குக் காலக்கெடு விதித்துள்ளது.
நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:
அரசிதழில் வெளியீடு: அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பரிசீலித்துத் தயாரிக்கப்படும் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை, வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் தமிழக அரசிதழில் (Gazette) அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும்.
கட்சிகளின் கருத்து: ஏற்கனவே அரசு தாக்கல் செய்த வரைவு நெறிமுறைகள் ஜனநாயகத்திற்கு எதிராக இருப்பதாக அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, கட்சிகளின் ஆலோசனைகளை அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேல்முறையீடு: அரசு வெளியிடும் இறுதி நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை எதிர்த்து அரசியல் கட்சிகள் மீண்டும் நீதிமன்றத்தைத் நாடலாம்.
பின்னணி:
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. ஜனவரி 5-க்குப் பிறகு தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசியல் ரோடு ஷோக்களும் இந்த புதிய விதிகளின் கீழ் கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.