ஜெகனை வெளியேற்றுவோம்.. ஆந்திராவை காப்பாற்றுவோம்.. சந்திரபாபு நாயுடு சூளுரை.!!
chandrababu naidu says about jagan mohan reddy
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை 40 சதவீத இடங்களை இளைஞர்களுக்கு வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தேசம் கட்சியை தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அக்கட்சியின் நிறுவனர் என்டி ராமாராவின் நூற்றாண்டை முன்னிட்டு ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சி மாநாடு நடத்தியது.
அப்போது என்டிஆர் சிலைக்கு சந்திரபாபு நாயுடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, தெலுங்கு தேசம் கட்சி கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளது. ஆனால் அதைவிட கடந்த மூன்று ஆண்டுகளில் நம் கட்சி சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். ஆந்திராவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.
தற்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நமக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா அரசியலை தெலுங்கு தேசம் கட்சிக்கு முன்பு, தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்பு என இரண்டாக பிரிக்கும் அளவிற்கு நாம் மக்களுக்கு சேவை செய்துள்ளோம். ஜெகன்மோகனுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை. காவல்துறை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகிறார். அவருக்கு எதிராக பேசினால் அவர்களை அழிக்க நினைக்கிறார்.
ஜெகன்மோகன் தன் மீதான வழக்குகளில் இருந்து வெளியேற மத்திய அரசிடம் ஆந்திர மாநிலத்தை அடகு வைத்துவிட்டார். அடுத்து நமது ஆட்சி தான். மக்களின் பிரச்சினைக்காக பாடுபவர்கள். பொய் வழக்குகளுக்கு பயப்படாதீர்கள். ஜெகனை வெளியேற்றுவோம், ஆந்திராவை காப்பாற்றுவோம். இதுவே நம்முடைய தாரக மந்திரம் என தெரிவித்துள்ளார்.
English Summary
chandrababu naidu says about jagan mohan reddy