ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் கே.எஸ்.தென்னரசு..?!
AIADMK KS Thenarasu will be contest in Erode East byelection
ஈரோடு கிழக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமுருகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை அடுத்து திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி இராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதிமுகவினர் விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் இன்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலில் முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதேபோன்று முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் தென்னரசு பெயர் இடம்பெறவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட கே.எஸ் தென்னரசு விருப்ப மனு வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் பார்த்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஈரோட்டில் நடைபெறும் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை பிற்பகல் அதிமுக வேட்பாளர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK KS Thenarasu will be contest in Erode East byelection