'ஆதவ் அர்ஜுனா தான்தோன்றித்தனமாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்'; அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி எச்சரிக்கை..!
AIADMK Deputy General Secretary KP Munusamy has warned Aadav Arjuna to stop speaking in an arbitrary and reckless manner
''ஆதவ் அர்ஜுனா மற்றக் கட்சிகளின் வரலாற்றை, அவை வளர்ந்த விதத்தை, தொண்டர்களின் தியாகத்தை அவர் மதிப்பீடு செய்யாமல் தான்தோன்றித்தனமாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;
அதிமுகவில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு சிலர், தவெக அமைச்சர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளதாகவும், இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவறான பல கருத்துகளைத் தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ளார். அவருக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர், நெல் மேல் குருவியைப் போல், எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கின்றதோ, அங்கெல்லாம் ஓடி, ஓடிச் சென்றுள்ள்ளார் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

அதாவது, ஆதவ் அர்ஜுனா முதலில், திமுக, விசிகவுக்கு சென்றவர், இறுதியாக அதிமுகவுக்கு வந்தார். ஆனால் அவருக்கு யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை. பின்னர், தவெகவுக்குச் சென்றார். தேர்தல் வந்தது, வாய்ப்புக் கிடைத்தது, வெற்றி பெற்றுப் பதவியும் பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஆனால், அவர் மற்றக் கட்சிகளின் வரலாற்றை, அவை வளர்ந்த விதத்தை, தொண்டர்களின் தியாகத்தை அவர் மதிப்பீடு செய்யாமல் தான்தோன்றித்தனமாகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வாக்களித்ததால்தான் தவெக வெற்றி பெற்றது என ஆதவ் அர்ஜுனா கூச்சமில்லாமல், வெட்கப்படாமல் சொல்கிறார். அரசியலில் பண்பும், தர்மமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "பேப்பர் அளவில்தான் பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கிறார்" எனக் கூறியுள்ளார். அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுமார் 52 ஆண்டு காலமாக ஒரு இயக்கத்தில் தொண்டனாக இருந்து, படிப்படியாக உயர்ந்து இன்று அதிமுக பொதுச் செயலாளராகப் பழனிசாமி உள்ளார். அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும், பொதுச்செயலாளர் மீது பற்றுடனும் அன்போடும் உள்ளனர். அதிமுகவின் வரலாறு ஆதவ் அர்ஜுனாவிற்குத் தெரியாது என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
மேலும், தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்றால் அது திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்தான் என்றும், அதிமுகவும் திமுகவும் பங்காளிகள். தவெக என்பது ஒரு சினிமா நடிகர் கொண்டு வந்த இயக்கம் என்று விமரித்துள்ளதோடு, அதிமுகவுக்கும் தவெகவுக்கும் சம்பந்தமே கிடையாது. அதிமுகவில் வெற்றி பெற்று 47 எம்எல்ஏக்களில் ஒரு சிலருக்கு ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அவர்கள், தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம் எனக் கூறினர். ஆனால், இதற்கு நாம் எதிர்த்து வாக்களிக்க உள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெளிவாகத் தெரிவித்து விட்டார். தவெகவினர் நம்மிடம் ஆதரவு கேட்கவில்லை என்றும் அவர் கூறினார். அதனையும் மீறி எங்களது நண்பர்கள் சிலர் தவெகவுக்கு ஆதரவு அளித்தார்கள். ஆனால், தவெகவுடன் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியினர், அதிமுக ஆதரவைப் பெற்றால் நாங்கள் கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்றனர்.
இதனால் ஆதவ் அர்ஜுனா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் துரோகம் செய்தார் என்றும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை உடைக்கப் பார்த்தார்கள், பின்னர் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளை உடைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தங்களைக் கூட்டணியில் தக்கவைத்துக் கொள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்துள்ளதாகவும், தவெக கட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்காகப் பிற கட்சிகளைப் பலிகடாவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார். அதேப்போன்று, அதிமுக மீது வன்மத்தைக் காட்டுகிறார்கள். இதுபோன்ற சித்து விளையாட்டுகளையும், லாட்டரி சீட்டு விளையாட்டுகளையும் எங்களிடம் காட்ட வேண்டாம் என்றும், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன்தான் உள்ளனர் என்று பேசியுள்ளார்.
போலியான தொண்டர்களைத் தங்கள் பக்கம் அழைத்துக்கொண்டதற்காகத் தவெகவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கவுள்ள புதிய மக்கள் இயக்கத்துக்கு வாழ்த்துகள். தமிழக மக்களை அண்ணாமலை ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK Deputy General Secretary KP Munusamy has warned Aadav Arjuna to stop speaking in an arbitrary and reckless manner