அதிமுகவின் சட்ட மன்ற துணை தலைவர் மற்றும் கொறடா பதவி யாருக்கு.? இபிஎஸ் எடுத்த முடிவு.!!
admk mlas meeting on june 14
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 14.06.2021 - திங்கட் கிழமை நண்பகல் 12.00 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், எம்.எல்.ஏ அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
14.06.2021 அன்று தலைமைக் கழகத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற இருப்பதால், கொரோனோ பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தலைமைக் கழகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு; தலைமைக் கழக வளாகத்திற்குள் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி மற்றும் சட்டமன்ற கொறடா தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு வைத்திலிங்கம் மற்றும் நந்தம் விஸ்வநாதன் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். சட்டமன்ற கொறடா பதவிக்கு கேபி முனுசாமி அல்லது கேபி அன்பழகன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமூக ரீதியாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா ஆகிய பதவிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
admk mlas meeting on june 14