நாடு முழுவதும் இன்று போர் கால ஒத்திகை; இதன் போது செய்ய வேண்டியவை என்ன..? முழு விபரம் உள்ளே..!
What to do during a wartime rehearsal Full details inside
ஜம்மு காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 54 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்த போர் கால ஒத்திகையின் போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்கால ஒத்திகை என்றால் என்ன..?
வான் வழி தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட நேரங்களில் பொது மக்களும், அரசு நிர்வாகமும் எப்படி அதனை எதிர்கொள்கிறது என்பதை குறித்து அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படுவது. இவ்வாறு சூழ்நிலைகளில் மக்களின் பயத்தை குறைப்பது, குழப்பங்களை தவிர்ப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படை நோக்கமாக கொண்டதே தத்ரூபமாக செய்யக்கூடிய போர் ஒத்திகை. இதன் மூலம், அதிகாரிகளும், பொதுமக்களும் போர் காலத்தில் தங்கள் பங்கு என்ன என்பதை ஆழ்ந்து அறிந்துகொள்வதுடன், இந்த ஒத்திகையின் மூலம், ஏதேனும் இன்னும் மேம்படுத்த வேண்டியது இருந்தால் அதனை கண்டறிந்து மேம்படுத்திக்கொள்ளமுடியும் என்பதற்காக இந்த போர் கால ஒத்திகை செய்யப்படுகிறது.
போர் கால ஒத்திகையின் போது என்னவெல்லாம் நடக்கும்..?
தற்காலிக மின் தடை
செல்போன் சிக்னல்கள் நிறுத்தம்
இணைய சேவைகள் தடை
போக்குவரத்து நிறுத்தம்
சில இடங்களில் மக்களை வெளியேற்றுதல்

போர் கால ஒத்திகையின் போது செய்ய வேண்டியவை..?
போர் ஒத்திகை நடக்கும் போது பதற்றப்படாமல், அதிகாரிகள் தெரிவித்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தண்ணீர், மருந்துகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மின்சாரம் அல்லது இணைய சேவை திடீரென சிறிது நேரம் தடைபட்டால் அச்சம்கொள்ளக் கூடாது.
உறுதிப்படுத்தப்படாத அல்லது வதந்திகளை சமூக வலைதளங்களில் பகிராமல் இருக்க வேண்டும்.
அரசு வானொலி அல்லது அரசு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்.

நாட்டில் 300 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த போர் கால ஒத்திகை அணுமின் நிலையங்கள், ராணுவத் தளங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், நீர்மின் அணைகள் போன்ற இடங்களிலும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் போது அனைத்து மாநிலங்களிலும் உள்ள அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ரயில்வே மற்றும் மெட்ரோ அதிகாரிகள், சீருடை அணிந்த காவல்துறை, துணை ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரும் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். நாட்டில் 54 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த பயிற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
What to do during a wartime rehearsal Full details inside