கருமை சூழ்ந்த நாடாளுமன்ற வளாகம்... டெல்லியில் தி.மு.க எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
Parliament complex surrounded DMK MPs protest
டெல்லியில் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் திமுக எம்பிக்கள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து நடைபெறும் இந்த போராட்டத்தில் தி.மு.க தோழமை கட்சிகளும் கலந்து கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
சுமார் ரூ. 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் அனைத்து கட்சி எம்.பிகள் குழு தொடர்ந்து வலியுறுத்தியது.
கடந்த மாதம் 27ஆம் தேதி முன்பு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதாக அமித்ஷா உறுதியளித்திருந்தார். ஆனால் இப்போது வரை அந்த நிதி தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
English Summary
Parliament complex surrounded DMK MPs protest