திருப்பதி போறீங்களா.! மலைப்பாதை வழியாக செல்ல புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.!!
New restrictions to travel to Tirupati through mountain pass due to leopard movement
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி திருப்பதிக்கு வந்து நடைபாதை வழியாக திருமலைக்கு சென்றனர். அவர்களில் பெற்றோருடன் லக்ஷிதா என்ற 6 வயதுடைய சிறுமி இரவு 8 மணி அளவில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே பெற்றோருக்கு சற்று முன் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது லக்ஷிதாவை திடீரென வந்த சிறுத்தை ஒன்று புதருக்குள் இழுத்துச் சென்றது.
கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்து பெற்றோர் அலறி கூச்சலிட்டதால் சக பக்தர்கள் சிறுத்தையை பின் தொடர்ந்தனர். இது குறித்து அன்று இரவே திருப்பதி வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டாலும் இரவு நேரம் என்பதால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் சிறுமி லக்ஷிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சிறிது தூரத்தில் சிறுமி லக்ஷிதாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சிறுமியின் உடல் பாதி கிடைத்ததால் மீதியை சிறுத்தை உட்கொண்டிருக்கலாம் எனக் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த மாதமும் சிறுவன் ஒருவனை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்ற போது பெற்றோர்கள் பின் தொடர்ந்ததால் ஒரு புதிருக்குள் விட்டு விட்டு சிறுத்தை தப்பி சென்றது. தொடர்ந்து திருமலை பாதையில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி நாளை (ஆகஸ்ட் 14) முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலை ஏற செல்ல அனுமதி இல்லை எனவும், இருசக்கர வாகனத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
English Summary
New restrictions to travel to Tirupati through mountain pass due to leopard movement