ஆந்திராவில் பரபரப்பு: வாலிபரை சுட்டுக்கொன்ற எம்.பி.யின் உதவியாளர்...!
MP aide shot dead a young man in Andhra
ஆந்திர மாநிலத்தில் பணத்தகராறில் எம்.பி யின் உதவியாளர், வாலிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலம் புலிவேந்தலா பகுதியை சேர்ந்தவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி அவினாஷ். இவரது உதவியாளர் பரத்குமார் யாதவ். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த திலீப் குமார் என்பவர் திருமணம் செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பணம் வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பி தரவில்லை என்பதால் இது தொடர்பாக, மகபூப் பாஷா என்பவர் முன்னிலையில் திலீப் குமாரும், பரத்குமார் யாதவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பரத்குமார் யாதவ், திலீப் குமார் மற்றும் மகபூப் பாஷாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே திலீப் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மகபூப் பாஷா பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த திலிப் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பரத்குமார் யாதவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
MP aide shot dead a young man in Andhra