ரேஷன் கார்டு பயோமெட்ரிக் பதிவு தீவிரம்: வீடு தேடி கைரேகை சேகரிப்பு பணி!அனைவருக்கும் பறந்த அரசின் உத்தரவு!
Intensified biometric registration for ration cards Door to door fingerprint collection drive underway government directive issued to all
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி) பதிவை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி சென்று கைரேகை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதுடன், இன்னும் பதிவு செய்யாதவர்களை நேரடியாகச் சந்தித்து பதிவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் சுமார் 11.25 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,523 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் மூலம் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட நிர்வாகத் தகவலின்படி, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டுகளில் 95.03 சதவீதம், முன்னுரிமை ரேஷன் கார்டுகளில் 96 சதவீதம் மற்றும் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகளில் 88 சதவீதம் பயோமெட்ரிக் பதிவு நிறைவடைந்துள்ளது.
இன்னும் பயோமெட்ரிக் பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களை கண்டறிந்து, ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி சென்று கைரேகை அல்லது கருவிழி பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேரின் பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை உரிய ஆவணங்களின் அடிப்படையில் நீக்கும் பணியும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்படும் என்று அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, அவ்வாறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள ரேஷன் கடையில் பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் பதிவு பணிகள் மாநிலம் முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுவிநியோகத் திட்டத்தின் பயனாளிகள் தங்களது விவரங்கள் சரியாக பதிவாகியுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Intensified biometric registration for ration cards Door to door fingerprint collection drive underway government directive issued to all