இந்தியா பாகிஸ்தானின் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்று மாலை ஒத்திவைப்பு...!
India Pakistan 2nd round of talks postponed for this evening
கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.

மேலும், தொடர்ந்து இந்தியா மீது ''டிரோன் மற்றும் ஏவுகணை'' தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் எதிர்த்து வெற்றிகரமாக முறியடித்தது.இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. மேலும், இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.இருந்தும், சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.
இதில், 4 தினங்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டதோடு, வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இயங்கின.
இந்த தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.அதைத்தொடர்ந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
India Pakistan 2nd round of talks postponed for this evening