மருமகனுக்கு விஷம் கலந்து விருந்து வைத்த மாமனார்...! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த கொடூர கொலை...! - சிக்கியது எப்படி...?
Father in law poisoned his son in law brutal murder took place birthday party How was he caught
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரும், அவரது மனைவி தானுவும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். கடந்த நவம்பர் 22ஆம் தேதி தானுவின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது தாய் வீட்டில் உறவினர்களின் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.
அன்றைய தினம் கேக் வெட்டி கொண்டாட்டத்தை நிறைவு செய்த பின்னர், அனைவரும் இரவு உணவு உண்டு ஓய்வுக்குச் சென்றனர்.ஆனால், மறுநாள் அதிகாலை சுமார் 3 மணியளவில் ஜிதேந்திராவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர்.

இந்த தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். ஆரம்ப கட்ட பரிசோதனையில் மரணத்திற்கான தெளிவான காரணம் தெரியாததால், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உடலில் இருந்து எடுத்த மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.இதற்கிடையில், ஜிதேந்திராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். அதன் பேரில், விசாரணை யமுனா பகுதியிலிருந்து கமலா நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இளம் தம்பதியருக்கிடையே அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததும், ஜிதேந்திரா மனைவியுடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்ததும் தெரியவந்தது.பின்னர் வெளியான தடயவியல் அறிக்கையில், சம்பவ தினத்தில் ஜிதேந்திரா அருந்திய மதுபானத்தில் விஷம் கலக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் பிரேத பரிசோதனையில் ‘சல்பாஸ்’ எனப்படும் கொடிய நச்சுப் பொருள் கலக்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவலர்கள், ஜிதேந்திராவின் மாமனார் மகேந்திராவிடம் நடத்திய விசாரணையில், அவர் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயலில் தானுவும் உடந்தையாக இருந்ததாகவும், தம்பதியருக்கிடையிலான அடிக்கடி ஏற்பட்ட சண்டைகளால் கோபமடைந்து திட்டமிட்டு இந்த கொலை நடைபெற்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவலர்கள், ஜிதேந்திராவின் மனைவி தானு மற்றும் மாமனார் மகேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Father in law poisoned his son in law brutal murder took place birthday party How was he caught