எம்.ஜி.ஆர் சிலை திறப்பு; புதுவையில் அதிமுக - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்.!
clash on admk and ops party members in puthuchery
புதுச்சேரியில் உள்ள வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை இருந்தது. இந்த சிலையை 1996-ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆனால், இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என்று எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் புதிதாக எம்.ஜி.ஆர். வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கிடையே புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் இன்று மீண்டும் அந்த சிலையை திறக்கவுள்ளதாக அறிவித்தனர்.
இதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என்று போலீசாரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில், இன்று காலை எட்டு மணி முதல் வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு மேல் ஒருபுறம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினரும், மறுபுறம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் உரிமை மீட்பு குழுவினரும் திரண்டனர். மேலும் அவர்கள் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டது.
English Summary
clash on admk and ops party members in puthuchery