ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!
Case against RSS rally hearing in Supreme Court today
ஆர்எஸ்எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு போன்று நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 45 மேல்முறையீட்டு வழக்குகள் ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு "சாலைகளில் பேரணி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர முழுமையாக தடை விதிக்க முடியாது.
மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி அதன் அடிப்படை உரிமை உறுதி செய்திட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
மேலும் சுற்றுச்சூழுடன் கூடிய மைதானத்தில் பேரணி நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் கடந்த செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி உத்தரவிட்டதோடு 3 தேதிகளை தேர்வு செய்து பேரணிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கும் படி உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் "கருத்துரிமை, பொது இடத்தில் கூடும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளுக்கு பொது நலன் கருதி நியாயமான கட்டுப்பாடுகளை அரசால் விதிக்க முடியும்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வை முன்பு விசாரணைக்கு வந்த பொழுது "தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் வீதிகள் தோறும் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது எனவும், சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு அரங்கம் போன்றவற்றில் நடத்துவதற்கு அனுமதி வழங்குகிறோம்" என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணி மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ளதால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
English Summary
Case against RSS rally hearing in Supreme Court today