மோடி அரசின் 'Operation RAGEPILL' நடவடிக்கை; ரூ.182 கோடி 'Jihadi Drug' பறிமுதல்; அமித் ஷா பாராட்டு..! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் 'ஆபரேஷன் ரேஜ்பில்' நடவடிக்கையின் மூலமாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு, ரூ.182 கோடி மதிப்பிலான 'கேப்டகான்' போதைப் பொருளை பறிமுதல் செய்து சர்வதேச போதைப்பொருள் கடத்தலை முறியடித்ததாக உள்துறை அமைச்சர் அமித்-ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

''சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிரான ஒரு பெரும் திருப்புமுனையாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB), 'ஆபரேஷன் ரேஜ்பில்' என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் கீழ் , கேப்டகான் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை என்சிபி வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளது.

இதன் விளைவாக, சுமார் ரூ. 182 கோடி மதிப்புள்ள 227.7 கிலோகிராம் கேப்டகான் மாத்திரைகள்/தூள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தக் கும்பலை சேர்ந்தவரான, விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த ஒரு சிரியா நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் இந்த நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார். 'ஆபரேஷன் ரேஜ்பில்' மூலம், கேப்டகான் போதைப் பொருளை நமது போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளன என்று அமித் ஷா கூறியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 'போதைப்பொருள் இல்லாத இந்தியா'வை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. 'ஆபரேஷன் ரேஜ்பில்' மூலம், ரூ.182 கோடி மதிப்புள்ள கேப்டகான் போதைப் பொருளை நமது முகமைகள் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படவிருந்த போதைப் பொருள் சரக்கைக் கைப்பற்றியதும், ஒரு வெளிநாட்டவரைக் கைது செய்ததும், போதைப்பொருட்களுக்கு எதிரான சமரசமற்ற கொள்கைக்கான நமது உறுதிப்பாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

நமது நிலப்பரப்பைப் பாதையாகப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழையும் அல்லது நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு கிராம் போதைப்பொருளையும் அரசு கடுமையாக ஒடுக்கும். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குப் பாராட்டுகள்’ என்று அமித் ஷா கூறியுள்ளார்.

கேப்டகான் கடத்தலுக்கு இந்தியா ஒரு பாதையாகப் பயன்படுத்தப்படுகிறது என்று வெளிநாட்டு போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமையிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், புது டெல்லியின் நெப் சராயில் ஒரு வீடு அடையாளம் காணப்பட்டது. மே 11 அன்று அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 31.5 கிலோ கேப்டகான் மாத்திரைகள் மீட்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், இந்த மாத்திரைகள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. விசாரணையில், சிரியா நாட்டவர் 15.11.2024 அன்று சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழைந்ததும், ஆனால் அவரது விசா 12.01.2025 அன்று காலாவதியாகிவிட்டதும், அவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்து, நெப் சராயில் உள்ள அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, மே 14 அன்று குஜராத்தின் முந்த்ராவில் சுமார் 196.2 கிலோ கேப்டகான் தூள் மீட்கப்பட்டது. ஆபரேஷன் ரேஜ்பில் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மொத்த கேப்டகான் மாத்திரைகள்/தூள், சுமார் 227.7 கிலோ ஆகும். வளைகுடா, மத்திய கிழக்கு நாடுகளில் இதன் சட்டவிரோத சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.182 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah lauds the seizure of rs182 crore worth of Jihadi Drugs during Operation RAGEPILL


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->