அரசியலில் இருந்து சசிகலா விலகியதன் பின்னணி.?! திடீர் முடிவுக்கு இப்படி ஒரு காரணமா.!?
why sasikala quit from politics
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, சமீபத்தில் வெளியாகியவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அதிமுகவில் இணைவாரா அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பலப்படுத்துவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
இந்த நிலையில் அவர் திடீரென்று அரசியலில் இருந்து முழுமையாக விளக்குவதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில், சசிகலாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல்வேறு விதமான தகவல்களை கொடுத்து வருகின்றனர்.
அதிமுகவிலிருந்து தினகரன் தனியாக பிரிந்த பொழுது உண்மையில் தினகரனுக்கு நிறைய ஆதரவு இருந்தது என்பதை ஆர்கே நகர் தொகுதியில் உணர்ந்தோம். ஆனால், அதிமுக இரட்டை இலையை முழுமையாக கைப்பற்றிய பின் தினகரன் மீது தொண்டர்களுக்கும் சில நிர்வாகிகளுக்கும் அவநம்பிக்கை ஏற்படத் துவங்கியது.
மக்களவை தேர்தலில் தினகரனின் நிலை படுமோசம். சசிகலா வந்தபின்னர் அதிமுகவிலிருந்து முக்கிய பதவியிலுள்ளவர்கள் பலரையும் எப்படியாது இழுத்து விடலாம் என்று சசிகலா கணக்கு போட்டார். ஆனால், திரைமறைவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தை எதுவும் எடுபடவில்லை.
தொடர்ந்து, மறைமுகமாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், ஆளும் கட்சி பலத்தை உணர்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை நம்ப தயாராக இல்லையாம். அடுத்ததாக கூட்டணி குறித்து சசிகலா எடுத்த முடிவும் மண்ணை கவ்வியது. எப்படியாவது பாஜகவிற்கு பணத்தை கரைத்து அந்த கூட்டணியில் நீடித்து கணிசமாக 15 தொகுதிகளை அள்ளலாம் என்று திட்டம் தீட்டினார்.
ஆனால், அதிமுகவிற்கு ஆபத்து என்று நினைத்த எடப்பாடி திட்டவட்டமாக அதற்கு மறுத்து விட்டார். இத்தகைய சூழலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து போட்டியிட்டாலும் அல்லது சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவு.
அதிமுகவின் வாக்கு வங்கியை சிறிது பாதித்தாலும் கூட இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது எட்டாக்கனி தான். திமுகவின் வெற்றிக்கு தான் இது காரணமாக அமையும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், கூட்டணி குறித்த சமீபத்திய பேட்டியில் தினகரன் பாஜக மற்றும் அதிமுகவை சிறுமைப்படுத்தும் விதமாக பேசியதும் சசிகலாவுக்கு கோபத்தை உண்டு பண்ணியதாக தெரிகிறது.
அதிமுக கட்சியுடன் எதிரி என்ற நிலையில் நீடிக்க சசிகலாவுக்கு விருப்பம் இல்லை. ஒருவேளை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருடன் இணக்கமாக செல்லும் பட்சத்தில் அதிமுகவில் கௌரவ பதவி வழங்கப்பட்டால் போதும் என்ற எண்ணம் சசிகலாவுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தினகரன் அணியை வைத்துக்கொண்டு தேர்தலில் நின்றால் தோல்வி உறுதி என்பதை சசிகலா முன்கூட்டியே அறிந்து தான், இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
why sasikala quit from politics