நீண்ட நாள் காத்திருப்பு... நாளை குரூப் 2, 2a தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது "TNPSC".!!
Tomorrow TNPSC will release Group 2 exam results
தமிழநாடு அரசு துறைகளில் காலியாக உள்ள 5,446 குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வை எழுதினர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் உடனடியாக ஜூன் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்த நிலையில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற முடிந்தாலும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஏற்பட்டது.
முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிட காலதாமதம் ஆனதால் டிஎன்பிஎஸ்சிக்கு எதிராக தேர்வர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். ஓர்ஆண்டுக்கு மேலாக தாமதம்ஏற்பட்டுள்ளதால் குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும் குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 785 அதிகரிக்கப்பட்டு ஏற்கெனவே இருந்த 5,446 பணியிடங்கள் 6151-ஆக அண்மையில் அறிவித்தது டிஎன்பிஎஸ்சி. இதன்படி 161 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,990 பதவிகளுக்கும் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12 (நாளை) வெளியாக உள்ளன. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகள் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் (pass word) பதிவிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
English Summary
Tomorrow TNPSC will release Group 2 exam results